/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்...தயார்!:தினமும் 60 லட்சம் லிட்டர் கையாள முடியும்;நன்னீரை லிட்டர் ரூ.6க்கு விற்கவும் திட்டம்
/
பொன்னேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்...தயார்!:தினமும் 60 லட்சம் லிட்டர் கையாள முடியும்;நன்னீரை லிட்டர் ரூ.6க்கு விற்கவும் திட்டம்
பொன்னேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்...தயார்!:தினமும் 60 லட்சம் லிட்டர் கையாள முடியும்;நன்னீரை லிட்டர் ரூ.6க்கு விற்கவும் திட்டம்
பொன்னேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்...தயார்!:தினமும் 60 லட்சம் லிட்டர் கையாள முடியும்;நன்னீரை லிட்டர் ரூ.6க்கு விற்கவும் திட்டம்
ADDED : பிப் 04, 2025 10:23 PM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள், முழுமையாக முடிந்து, தயார் நிலையில் உள்ளது. இங்கு, தினமும், 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை கையாளவும், சுத்திகரிக்கப்பட்ட நன்னீரை, தனியார் தொழில் நிறுவனங்களுக்கும், லிட்டர் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில், 69 கி.மீ., 237 தெருக்கள் உள்ளன. இங்கு இரண்டு கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக, 62.82 கோடி ரூபாயில், நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதம் உள்ள, 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், ‛மேன்ஹோல்'கள் ஆகியவை பொருத்தும் பணிகளும், குடியிருப்புகளின் கழிவுநீரை சேகரிக்க வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கீழ்நிலை தொட்டிகள் அமைக்கும் பணிகளும் முடிந்து உள்ளன.
குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்தகரித்து, அதிலுள்ள கசடுகளை அகற்றி, நன்னீராக மாற்றி, ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, பொன்னேரி, பெரியகாவணம் பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே, 1.5 ஏக்கர் பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமான பணிகள், 2023ல் துவங்கப்பட்டன.
ஆறு நிலைகளில் சுத்திகரிப்பதற்கான கட்டமைப்புகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன. தற்போது கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து, தயார் நிலையில் இருக்கிறது. இங்கு தினமும், 60 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கழிவுநீரை ஆறு நிலைகளில் சுத்திகரிப்பதற்கு தேவையான கட்டட கட்டமைப்புகள், ராட்சத தொட்டிகள், அதில் சுத்திகரிப்பு உபகரணங்கள், கிருமிகளை அகற்றுவதற்கு புளோயர்கள், 16 மோட்டார்கள், அதற்கான குழாய் இணைப்புகள், ஜெனரேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் தயார் நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்வதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த கட்டமாக, குடியிருப்புகளுக்கு, பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், 5.20 கோடி ரூபாயில், 7,605 குடியிருப்புகளுக்கு, 'இன்டர்னல் பிளம்பிங்' முறையில் இணைப்பு வழங்குவதற்கான பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தில், 100 சதவீத பணிகள் முடிந்து, கழிவுநீர் வருவதற்கும், சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஆற்றில் விடுவதற்குமான பைப்லைன் அமைக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட நன்னீரை தனியார் தொழில் நிறுவனங்களுக்கு, லிட்டர் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

