/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை இணைப்பு... விரைவில்!: 7,605 வீடுகளுக்கு செயல்படுத்த நகராட்சி தீவிரம்
/
பொன்னேரியில் பாதாள சாக்கடை இணைப்பு... விரைவில்!: 7,605 வீடுகளுக்கு செயல்படுத்த நகராட்சி தீவிரம்
பொன்னேரியில் பாதாள சாக்கடை இணைப்பு... விரைவில்!: 7,605 வீடுகளுக்கு செயல்படுத்த நகராட்சி தீவிரம்
பொன்னேரியில் பாதாள சாக்கடை இணைப்பு... விரைவில்!: 7,605 வீடுகளுக்கு செயல்படுத்த நகராட்சி தீவிரம்
ADDED : நவ 29, 2024 09:26 PM
பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 5.20 கோடி ரூபாய் செலவில், 7,605 வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியை மேற்கொள்ள நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில், 69 கி.மீட்டரில், 237 தெருக்கள் உள்ளன. இங்கு, இரண்டு கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான திட்டப்பணிகள், 2018ல் துவக்கப்பட்டன.
முதற்கட்டமாக, 62.82 கோடி ரூபாயில், நகராட்சிக்கு உட்பட்ட, 1 - 5 வரையிலான வார்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 22 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தெருக்களில் பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், ‛மேன்ஹோல்கள்' பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
குடியிருப்புகளின் கழிவுநீர் சேகரிக்க வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில், கழிவுநீர் சேகரிப்பு கீழ்நிலை தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு, அங்கு ஜெனரேட்டர், பம்பிங் மோட்டார் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளன.
நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாவணம் பகுதியில், ஆரணி ஆற்றின் அருகே, தினமும் 65 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து, நன்னீராக்கி ஆற்றில் விடுவதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளுக்கும், சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையே, ஆரணி ஆற்றில், 12 மீட்டர் ஆழத்தில், 250 மீ., நீளத்திற்கு 'ஹரிசாண்டல் புல்லிங்' முறையில் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுற்று இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த கட்டமாக, இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகளுக்கு, பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க, நகராட்சி நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக நகராட்சிக்கு உட்பட்ட, 7,605 குடியிருப்புகளுக்கு, 'இன்டர்னல் பிளம்பிங்' முறையில் இணைப்பு வழங்குவதற்கு, 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறியதாவது:
தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. தற்போது, கழிவுநீர் தொட்டிகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு, ஆற்றின் குறுக்கே பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அடுத்த வாரம் இப்பணிகள் முடிந்துவிடும். இத்திட்டத்தில் இணைய இருக்கும் குடியிருப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் முடிந்தவுடன், குடியிருப்புகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுநீர், பல்வேறு நிலைகளில் சுத்திகரித்து, நன்னீராக்கி ஆற்றில் விடப்படும். அடுத்த ஓரிரு மாதங்களில் திட்டம் முழுமையாக செயலுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.