/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி கோவில் குளம் சீரமைப்பு பணி மந்தம்
/
சிறுவாபுரி கோவில் குளம் சீரமைப்பு பணி மந்தம்
ADDED : அக் 29, 2024 03:52 AM

கும்மிடிப்பூண்டி : சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பின்புறம் பரந்து விரிந்து காணப்படும் குளம், வரலாற்று சிறப்பு மிக்க குளமாகும்.
குளத்தை சீரமைக்க, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டன. குளத்தை ஆழப்படுத்தி, குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் நிறுவி படித்துறை அமைத்து, குளத்தை சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விறுவிறு என துவங்கப்பட்ட பணிகள், இடம் ஒதுக்குவதில் ஏற்பட்டசிக்கல்களால் முடங்கின.
அதற்கு தீர்வு ஏற்பட்ட நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் மீண்டும் பணிகள் தொடரப்பட்டன. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், புதுப்பிப்பு பணிகளில் இழுபறி நீடிக்கிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.