அனுமதி அளித்தும் பட்டா கிடைக்காமல் 1,800 பேர் பரிதவிப்பு!ஆறு ஆண்டுகளாக பத்திரம் பதிவதில் தொடரும் சிக்கல்
அனுமதி அளித்தும் பட்டா கிடைக்காமல் 1,800 பேர் பரிதவிப்பு!ஆறு ஆண்டுகளாக பத்திரம் பதிவதில் தொடரும் சிக்கல்
UPDATED : ஜூலை 19, 2026 10:02 PM
ADDED : ஜூலை 19, 2026 09:11 PM

திருத்தணி: திருத்தணி நகராட்சியில், கிராம நத்தத்தில் வீடுகள் கட்டி வசிக்கும் 1,800 பேருக்கு கணினி பட்டா வழங்கப்படும் என, அரசு அறிவித்து, ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், சொத்துக்களை பரிமாற்றம் மற்றும் புதிய வீடு கட்டுவோர் கட்டட அனுமதி வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருத்தணி நகராட்சியின் 21 வார்டுகளில், 13,029 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். மேலும், 1,510 வணிக வளாகங்கள் உள்ளன. நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கியும், சொத்து வரி வசூலித்தும் வருகிறது.
நகராட்சியில் வீடுகள், காலி மனைகளுக்கு, 2017ம் ஆண்டு வரை, திருத்தணி தாசில்தார் அலுவலகம் மூலம் பட்டா வழங்கப்பட்டு வந்தது.
மேலும், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற பணிகளுக்கு, பயனாளிகள் தாலுகா அலுவலகத்திற்கு பல மாதங்களாக வர வேண்டியிருந்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில், திருத்தணி நகராட்சியில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா, பெயர் மாற்றம், திருத்தங்கள் செய்வதற்கு, தனியாக ஒரு தாசில்தார் தலைமையில், மூன்று சர்வேயர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு, நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், காலிமனை போன்றவற்றை கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன.
பின், 2018ம் ஆண்டு, நில அளவையாளர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்து, நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், வணிக வளாகங்களுக்கும் நேரில் சென்று அளவீடு செய்யப்பட்டது.
இதில், பாறை, நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் 2,200 பேர் வீடுகள் கட்டி வசித்து வந்ததும், 4,000 குடும்பத்தினருக்கு மேல், கிராம நத்தத்தில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி, பல ஆண்டுகளாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வர், சட்டசபையில் கிராம நத்தம், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போரின் பெயர்களில், ஆன்லைன் பட்டா வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆன்லைன் பட்டா வழங்கும் பணிகள் தொடங்கி, தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கிராம நத்தத்தில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியவர்களுக்கு, இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
வீடுகளுக்கு பட்டா பெற முடியாததால், வீட்டு நிலத்தை பெயர் மாற்றம் மற்றும் பரிமாற்றம் செய்ய முடியவில்லை. மேலும், புதிதாக வீடுகள் கட்டுவதற்கு, 'பிளான் அப்ரூவல்' வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
எனவே, கிராம நத்தத்தில் வசிப்போருக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து திருத்தணி நகர நில அளவை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சியில், கிராம நத்தத்தில் 1,850 பேர் வீடுகள், 1,450 பேர் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். கிராம நத்தத்தில் கட்டிய வீடுகள், கடைகளை அளவீடு செய்தும், அவர்களின் பெயர்களின் விபரம் சேகரித்து, பட்டா வழங்குவதற்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.
பட்டா வழங்கப்படும் பயனாளிகளின் பெயர்கள், வீடுகள் கட்டியுள்ள சதுரடி கணக்கு குறித்து புள்ளி விபரம் தயாரித்தும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில அளவை, நிலவரி மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.
அந்த துறை இயக்குனர், முதற்கட்டமாக கிராம நத்தத்தில் வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு மட்டும் ஆன்லைன் பட்டா வழங்கலாம். வணிக வளாகங்களுக்கு தற்போது பட்டா வழங்க வேண்டாம் என, அறிவுறுத்தினார்.
அதன்படி,நிலத்தின் வகைப்பாடு மாற்றுவதற்கு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தால், நில அளவையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் பட்டா வழங்கும் வீடுகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கி, உண்மைத்தன்மைகளை பரிசோதித்து, ஒரு வாரத்தில் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
