/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பலி; 7 பேர் 'சீரியஸ்'
/
மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பலி; 7 பேர் 'சீரியஸ்'
மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பலி; 7 பேர் 'சீரியஸ்'
மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பலி; 7 பேர் 'சீரியஸ்'
ADDED : மார் 24, 2025 03:04 AM

கும்மிடிப்பூண்டி,:சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். இவர், தங்கை ஆலியா பேகம், 23, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த தோழி சம்ரீன், 20, நண்பர்கள் தீனா, 21, ஸ்ரீமன், 21, யோகேஷ்வரன், 20, மாதேஷ், 21, பெஞ்சமின், 26, ஆகியோருடன், நேற்று காலை ஆந்திர மாநிலம், வரதையாபாளையம் நீர்வீழ்ச்சிக்கு, 'மாருதி எர்ட்டிகா'காரில் புறப்பட்டு சென்றனர்.
மொத்தம் எட்டு பேர் காரில் பயணித்த நிலையில், காரை முகமது ஆவேஷ் ஓட்டிச் சென்றார். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பெரியவேடு பகுதியில், முன்னாள் சென்ற லாரி ஒன்று குறுக்கிட்டதால், காரை இடதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரங்களில் உரசியபடி, தென்னை மரம் மீது வேகமாக மோதியது. இதில், கார் முழுதும் உருக்குலைந்தது.
கல்லூரி இறுதியாண்டு மாணவி சம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ஏழு பேருக்கும், எளாவூர் சோதனைச்சாவடி அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, சம்ரீன் உடல் பிரேத பரிசோதனைக்காக, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆந்திர மாநிலம் தடா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.