/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளியில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக புகார்
/
அரசு பள்ளியில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக புகார்
அரசு பள்ளியில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக புகார்
அரசு பள்ளியில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக புகார்
ADDED : ஜூன் 26, 2025 09:37 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால், மாணவியருக்கு சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1,450க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளி வளாகத்தில் கழிப்பறைகள் இல்லை. தற்போது இருக்கும் கழிப்பறைகள் கூட, பள்ளி நிர்வாகம் துாய்மையாக பராமரிப்பது கிடையாது என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டு துவக்கம் முதலே, கழிப்பறைகள் துர்நாற்றம் வீசி வருவதாக, ஆசிரியர்களிடம் மாணவியர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பள்ளி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை எப்போதும் துாய்மையாக பராமரித்து வருகின்றனர். பல்வேறு மாணவியர் கழிப்பறையை பயன்படுத்தாமல், சிறுநீரை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வருகின்றனர்.
வேறு வழியின்றி கழிப்பறையை பயன்படுத்தும் மாணவியர் பலர், சிறுநீர் பாதையில் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மாவட்ட கல்வி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, மாணவியரின் சுகாதாரம் கருதி, கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக பராமரிப்பதுடன், கூடுதல் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.