/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : பிப் 12, 2025 01:45 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூசத்தையொட்டி, அதிகாலை,4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தன காப்பு, தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
நேற்று, தைப்பூசம், முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை மற்றும் அரசு விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்தனர்.
இதனால் பொது வழியில், ஏழு மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில், மூன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
சில பக்தர்கள் மலர், மயில் காவடிகள், பால்குடம் எடுத்தும் அலகு குத்தி, மொட்டை அடித்தும் நேர்த்தி கடனை செலுத்தினர்.
தேர்வீதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் தள்ளுமுள்ளுயுடன் வரிசையில் நின்றும் மூலவரை தரிசனம் செய்தனர்.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் அனைத்து வாகனங்களும் தடை விதிக்கப்பட்டது. கோவில் சார்பில், மொத்தம், 10 பேருந்துகள்,மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன.
ஆர்.கே.பேட்டை
சோளிங்கர் கொண்டபாளையம் யோகநரசிம்மர் கோவில், யோக அனுமன் ஆகிய கோவில்களில் தைப்பூசம் ஒட்டி பாண்டவ தீர்த்த குளக்கரையில் பக்தோசித பெருமாளுக்கு நேற்று சிறப்பு உற்சவம் நடைபெற்றது.
ஆர்.கே.பேட்டை வங்கனுார் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சின்னபிள்ளையார் கோவில்களிலும் நேற்று தைப்பூச உற்சவம் நடந்தது
திருவாலங்காடு அடுத்த, பாகசாலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி காலையில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு மந்திர மயில் வாகனத்தில், உற்சவர் உலா வந்தார்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. முன்னதாக, பக்தர்கள் பால்குடம் ஏந்திச் சென்றனர்.
பேரூராட்சி அலுவலகம் அருகில் வீரபத்திர சுவாமி கோவிலில் முருகப்பெருமான் படம் வைத்து காந்தி நகர் மகளிர் சுயஉதவிக் குழுவினர் தைப்பூசம் கொண்டாடி அன்னதானம் வழங்கினர்.
பேந்தவாக்கம் திரிபுர சுந்தரி அம்பாள் தேவநாதீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
திருவள்ளூர்
திருவள்ளூர் திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, வள்ளலார் வீதியுலா நடந்தது. தொடர்ந்து வள்ளலாருக்கு மஹா அபிஷேகம், பரதநாட்டியம் நடந்தது. மாலையில், முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.
சிவ - விஷ்ணு கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, வள்ளலார் ஜோதி தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- நமது நிருபர் குழு ---