/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறரை ஆண்டுகளாக கடைகளை திறக்க முடியாமல் திணறும் அரசு
/
ஆறரை ஆண்டுகளாக கடைகளை திறக்க முடியாமல் திணறும் அரசு
ஆறரை ஆண்டுகளாக கடைகளை திறக்க முடியாமல் திணறும் அரசு
ஆறரை ஆண்டுகளாக கடைகளை திறக்க முடியாமல் திணறும் அரசு
ADDED : டிச 09, 2024 02:19 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில், 2018ம் ஆண்டு, ஜூன் மாதம், அ.தி.மு.க., ஆட்சியில், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறக்கப்பட்டது. அதில், நகலகம், உணவகம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக, 10 கடைகள் நிறுவப்பட்டன.
திறந்த ஆண்டே, அந்த கடைகளுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. ஏலம் எடுப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மறுதேதி அறிவிக்கப்படாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும், 2022ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், ஆகஸ்ட் மாதம் பொது ஏலம் நடைபெற்றது. அப்போதும், கடைகளை பிரிப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பிரச்னை காரணமாக, ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், ஆறரை ஆண்டு காலமாக, அந்த, 10 கடைகளையும் திறக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.
அங்கு, தினமும் நுாற்றுக்கணக்காக லாரிகளை நிறுத்தி, ஆவண தணிக்கை செய்யப்படுகிறது. பல மணி நேரம் லாரிகள் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதன் ஓட்டுனர்கள் நகல் எடுப்பதற்கும், காத்திருக்கும் நேரத்தில், உணவு மற்றும் தேநீர் அருந்த, 3 கி.மீ., தொலைவில் உள்ள எளாவூர் பஜார் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
சோதனைச்சாவடி வளாகத்தில் கடைகள் இருந்தும், அவை திறக்கப்படாத நிலையில், அங்கு வரும் வாகன ஓட்டிகள், லிப்ட் கேட்டு எளாவூர் பஜார் பகுதி சென்று வருவதால் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடைகளுக்கான ஏலத்தை, உடனடியாக நடத்தி, அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.