/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
/
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
ADDED : அக் 05, 2025 09:36 PM
திருத்தணி:லட்சுமாபுரத்தில் மக்கள் நிதியுதவியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம், மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடை கட்டடம் இல்லாததால், பழுதடைந்த வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, 2022ம் ஆண்டு 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஏரி அருகே நீர்நிலை புறம்போக்கில், ரேஷன் கடை கட்டடம் கட்டினர். அதே ஆண்டில், திறப்பு விழாவையும் மக்களே நடத்தினர்.
ஆனால், ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதற்கு காரணம், நீர்நிலை புறம்போக்கில் ரேஷன் கடை கட்டியதால், கூட்டுறவு துறையினர் ரேஷன் பொருட்கள் அனுப்ப மறுத்து வருகின்றனர்.
தற்போதும், பழுதடைந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. மழை பெய்தால், ரேஷன் பொருட்கள் நனையும் அவல நிலை தொடர்கிறது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுத்து, மக்கள் கட்டிய ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.