/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி முடக்கம்
/
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி முடக்கம்
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி முடக்கம்
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி முடக்கம்
ADDED : பிப் 26, 2024 06:37 AM

ஆக்கிரமிப்பால் குறுகி போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் - செங்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி, அரசியல்வாதிகள் சிலரால் காலதாமதம் ஏற்படுகிறது. அங்கு, கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில், பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இங்கு மோட்டார் வாகனம், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான, மூலப்பொருட்களை வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரும் கனரக வாகனங்கள், செங்குன்றத்தில் இருந்து, திருவள்ளூர் - மணவாள நகர் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் தொழிற்பேட்டையில் உற்பத்தியாகும் பொருட்கள், இதே வழியில், வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால், திருவள்ளூர் - செங்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான கனரக மற்றும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், திருவள்ளூர் - செங்குன்றம் மாநில நெடுஞ்சாலை திகழ்கிறது.
இதையடுத்து, எதிர்கால போக்குவரத்தை கணக்கிட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இச்சாலை அகலப்படுத்தப்பட்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.இந்த நிலையில், திருவள்ளூர் - செங்குன்றம் சாலை நடுவில் தாமரைப்பாக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து, இடதுபுறம் பெரியபாளையத்திற்கும், வலதுபுறம் திருநின்றவூருக்கும், சாலை பிரிகிறது.
திருவள்ளூர், செங்குன்றம், பெரியபாளையம் மற்றும் திருநின்றவூர் ஆகிய நான்கு சாலைகள் இணையும் இடமாக தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளது. இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் வீடு கட்டி உள்ளனர். இதனால் சாலை குறுகி, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பகுதிவாசிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவ்வப்போது அளித்த கோரிக்கையை ஏற்று, தாமரைப்பாக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு ரவுண்டானா அமைத்து, சாலையை அகலப்படுத்துமாறு, 2015ல் அப்போதைய கலெக்டர் நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் அளவெடுத்து, ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை அகற்றினர்.
இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டாலும், உள்ளூர் அரசியல்வாதிகள் துணையுடன், கடைக்காரர்கள் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
சில நேரங்களில் நெடுஞ்சாலை துறையினர், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றினாலும், முழுமையாக நிறைவேற்றவில்லை.
மேலும், நான்கு சாலைகள் பிரியும் இந்த இடத்தில், நிரந்தரமாக 'ரவுண்டானா' அமைக்க வேண்டும் என்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டம், இதுவரை நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது.
எனவே, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி மற்றும் சென்னை - கோல்கட்டா ஜி.என்.டி., என, மூன்று தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான, திருவள்ளூர் - செங்குன்றம் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும்.
மேலும், நெரிசல் ஏற்படும் இடமான தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், ஆக்கிரமிப்பினை அகற்றி, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மாதவரம், பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல் பகுதியைச் சேர்ந்தோர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்களும், செங்குன்றம் சாலையை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, இச்சாலையை அகலப்படுத்தி, மழைநீர் கால்வாய், மைய தடுப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அப்பணி துவங்கும் போது, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையும் அகலப்படுத்தப்படும்.
-- நெடுஞ்சாலை துறை அதிகாரி,
திருவள்ளூர்.
ரூ.5 கோடி என்னாச்சு?
திருவள்ளூர் - செங்குன்றம் மார்க்கத்தில், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை நடுவில் ரவுண்டானா அமைத்து, சாலை நடுவில் ஒரு மீட்டர் உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். சாலை தடுப்பில் இருந்து இருபுறமும் 20 மீட்டர் அகலத்தில் சாலை அகலப்படுத்தப்படும். மேலும், நான்கு சாலையிலும் மழைநீர் கால்வாய் அமைத்து, அதற்கு அருகில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்படும். இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கடந்த, 2015ல் திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கிய நிதி என்ன ஆனது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

