/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அலட்சியம்
/
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அலட்சியம்
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அலட்சியம்
அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அலட்சியம்
ADDED : நவ 25, 2024 02:45 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில், விவசாய நிலங்களில் அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகளால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்துார், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே.பேட்டை, சோழவரம், திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர், வில்லிவாக்கம் என, 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சியில் அனுமதியின்றி செங்கல் சூளை இயங்குவது, தற்போது அதிகரித்து வருகிறது.
செங்கல் சூளை அமைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, ஒன்றிய நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், செங்கல் சூளை நடத்துவோர் முறையான அனுமதி பெறாமல் நடத்தி வருவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மூன்றடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது என்ற விதி இருந்தும், செங்கல் சூளை நடத்துவோர் அதை பின்பற்றுவதில்லை.
இதேபோல் ஊராட்சி பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இதை, அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
அனுமதி எப்படி
ஊராட்சி பகுதிகளில் பட்டா நிலங்களில் செங்கல் சூளை நடத்துவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்று, ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதிக்க கோரி மனு அளிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக, 1 லட்சம் முதல் 2.5 லட்சம் செங்கல் வரை 2,000 ரூபாயும், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் செங்கல் வரை 2,500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மேலும் குடியிருப்புகள், பள்ளி மற்றும் பொது இடங்களுக்கு அருகில் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலையோரம் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் என்ற விதிகளின்படி, செங்கல் சூளை நடத்த வேண்டும்.
ஆனால் ஊராட்சி பகுதிகளில் இவ்வாறு செங்கல் சூளை நடத்துவோர், பெரும்பாலும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், செங்கல் சூளை நடத்துகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அனுமதியின்றி நடந்து வரும் செங்கல் சூளைகளை ஆய்வு செய்து, அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டம் முழுதும் ஏரி, குளம், குட்டை போன்ற பட்டா நிலங்களில் அனுமதி மற்றும் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் செங்கல் சூளைகள் குறித்து, அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளோம்.
மாவட்ட நிர்வாகம் அளிக்கும் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.