ADDED : ஜூலை 04, 2025 02:36 AM
மீஞ்சூர்:ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 22 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றி, இருவரை கைது செய்தனர்.
ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார், மீஞ்சூர், மணலி, செங்குன்றம், அத்திப்பட்டு, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோழவரம் டோல்கேட் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டையை சேர்ந்த கார்த்திக், 30, தேவகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், 28, என்பது தெரிந்தது.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.