ADDED : அக் 19, 2024 12:55 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, ரயில் பாதையின் கீழ், நகர் மற்றும் சிப்காட் பகுதியை இணைக்கும், சுரங்க பாதை உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன் அந்த சுரங்க பாதை திறக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக, சுரங்க பாதையின் பக்கவாட்டு சுவர் வழியாக, தண்ணீர் கசிகிறது.
இதனால், மழைக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும், சுரங்க பாதையில் தண்ணீர் தேங்குவதால், அதனை கடந்து செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கசிவை அடைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ரயில்வே நிர்வாகத்தினர், கசிவை அடைக்கும் பணிகளை மேற்கொண்டனர். ‛போம் இன்ஜெக்டர்' முறையில் கசிவுகளை அடைத்தனர். அடுத்த சில நாட்களில், அடைத்த இடங்களை தவிர்த்து புதிய இடங்களில் தண்ணீர் கசிய துவங்கியது.
தற்போது, கசிவுகள் அதிகரித்து, சுரங்க பாதையில் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை பலவீனமாவதுடன், கசியும் தண்ணீரால் சுரங்க பாதை சாலையும் குண்டும் குழியுமாக மாறி வருகிறது. இந்த பிரச்னைக்கு, ரயில்வே நிர்வாகத்தினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

