/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீர்வள துறை தயக்கம் ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவாரா கலெக்டர்?
/
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீர்வள துறை தயக்கம் ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவாரா கலெக்டர்?
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீர்வள துறை தயக்கம் ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவாரா கலெக்டர்?
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நீர்வள துறை தயக்கம் ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவாரா கலெக்டர்?
ADDED : ஜூலை 11, 2025 01:16 AM

திருவள்ளூர்:காக்களூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, வீடு, கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும், நீர்வளத்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். கலெக்டர் ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்ற சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில், காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, ஆறு ஆண்டுக்கு முன் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், திருவள்ளூர் நகரம் மழை காலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
காக்களூர் ஏரி, 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி எல்லையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரைக் கொண்டு, காக்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டு வந்தது.
நகர் விரிவாக்கம் காரணமாக, காக்களூர் ஏரியில் ஒரு பகுதியை, வீட்டு வசதி வாரியம் மூலமாக, வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்டது. மீதம் உள்ள, 100 ஏக்கர் அளவில் தான் ஏரி உள்ளது.
இந்த ஏரியைச் சுற்றி உள்ள, ஜே.என்.சாலை, திரு.வி.க., பேருந்து நிலையம், காக்களூர் ஏரிக்கரை சாலை ஆகிய இடங்களுக்கு அருகில், பலரும் வீடு, கடை என, 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவின்படி, கடந்த, ஆக., 2018ம் ஆண்டு, திருவள்ளூர் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர், காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதில், அப்போது, 201 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களை, 21 நாட்களுக்குள் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. வீடுகளை இழந்தோருக்கு, பட்டரைபெரும்புதுாரில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின், இந்த நடவடிக்கை பல்வேறு அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை மாவட்ட நிர்வாகம், காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராமல் அலட்சியமாக உள்ளது. ஐகோர்ட் உத்தரவு இருந்தும், நீர்வளம், வருவாய் துறையினரின் அலட்சியத்தால், ஒவ்வொரு மழை காலத்திலும், திருவள்ளூர் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.
எனவே, கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

