/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட எதிர்பார்ப்பு
/
மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட எதிர்பார்ப்பு
மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட எதிர்பார்ப்பு
மகளிர் காவல் நிலையம் பொன்னேரியில் செயல்பட எதிர்பார்ப்பு
ADDED : பிப் 13, 2024 08:22 PM
பொன்னேரி:பொன்னேரி காவல் சரகத்தில், பொன்னேரி, திருப்பாலைவனம், மீஞ்சூர், காட்டூர், சோழவரம் ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.
மேலும், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையமும் இயங்கி வந்தது. மேற்கண்ட ஐந்து காவல் நிலையங்களுக்கு வரும் மகளிர் பிரச்னைகள், போக்சோ, குடும்பத் தகராறு உள்ளிட்ட புகார்கள் மீது இங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆவடி ஆணையரகம் உருவாக்கப்பட்ட பின், கடந்த, 2022ல், மீஞ்சூர், சோழவரம், காட்டூர் காவல் நிலையங்கள் அதனுடன் இணைக்கப்பட்டது.
அப்போது, மீஞ்சூர், சோழவரம், காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில், மகளிர் தொடர்பான புகார்கள் சென்னை அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனால் புகார்தார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி முதல், பொன்னேரி, திருப்பாலைவனம் ஆகிய காவல் நிலையங்களும் ஆவடி ஆணையரகத்துடன் இணைக்கப்பட்டன.
பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைக்கப்பட்டதற்கான அறிவிப்பாணை எதுவும் இல்லை. இதனால், அங்கு, ஆய்வாளர், பெண் காவலர்கள் யாரும் இல்லை. ஏற்கனவே இங்கிருந்தவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டின் கீழ் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர்.
தற்போதைய நிலையில், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் கொடுக்கும் புகார்களை சட்டம் - ஒழுங்கு பிரிவில் உள்ள பெண் போலீசார் பெற்று அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்கின்றனர்.
புகாரின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள புகார்தாரர்கள் அம்பத்துார் செல்ல வேண்டிய நிலையே உள்ளது. புகார்தாரர்கள், 25 - 65 கி.மீ., தொலைவு பயணித்து அம்பத்துார் மகளிர் காவல் நிலையம் செல்லும் சூழல் உள்ளது. இதனால் புகார்தாரர்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.
மேற்கண்ட ஐந்து காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் எளிதாக புகார் அளித்து தீர்வு காணும் வகையில், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை நியமித்து ஆவடி ஆணையரக கட்டுப்பாட்டில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

