/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளி கொலை செய்து புதைப்பு; பாதிரிவேடு கிராமத்தில் பரபரப்பு
/
தொழிலாளி கொலை செய்து புதைப்பு; பாதிரிவேடு கிராமத்தில் பரபரப்பு
தொழிலாளி கொலை செய்து புதைப்பு; பாதிரிவேடு கிராமத்தில் பரபரப்பு
தொழிலாளி கொலை செய்து புதைப்பு; பாதிரிவேடு கிராமத்தில் பரபரப்பு
ADDED : ஜன 30, 2024 01:41 AM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில், மூர்த்தி ஐயா தெருவில் வசித்தவர் பாலசுப்பிரமணியன், 43. நெசவு தொழிலாளியான இவரது நண்பர் டெல்லி பிரசாத், 40. செங்குன்றம் அடுத்த பாலவாயில் பகுதியில் உள்ள அரசு மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
டெல்லி பிரசாத்துக்கு முதுகு வலி இருப்பதால், டூ - -வீலரை ஓட்டுவதுடன் கடையில் தனக்கு உதவியாக இருக்க பாலசுப்பிரமணியத்தை கடந்த ஓராண்டு காலமாக அழைத்து சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல், டெல்லி பிரசாத்துடன் காலையில் சென்ற பாலசுப்பிரமணியன், இரவு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் சதீஷ், 19, பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், அவரது வீட்டின் தெருமுனையில், அவர் பயன்படுத்தும் தலைகவசம், சாப்பாட்டு பை, ரத்த கறையுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
சற்று தொலைவில் உள்ள குளக்கரை அருகே உடலை புதைத்தது போல் மண் குவியல் காணப்பட்டது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில், அந்த இடத்தை போலீசார் தோண்டினர்.
அதில், பாலசுப்பிரமணியத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தலையில் ரத்த காயங்களுடன் இருந்த உடலை பொன்னேரி அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து டெல்லி பிரசாத்திடம் போலீசார் கேட்ட போது, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் தெரு முனையில் அவரை இறக்கி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் பெயரில் டெல்லி பிரசாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலசுப்பிரமணியன் அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம், பாதிரிவேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.