ADDED : ஜூன் 15, 2025 08:08 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், இளைஞர் படுகாயம் அடைந்தார்.
பள்ளிப்பட்டு அடுத்த கொத்தகொல்லகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ், 25. இவர், நேற்று முன்தினம் இரவு திருப்பதியில் இருந்து 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
கொளத்துார் அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி, நரேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நரேஷின் கால்கள், லாரியின் சக்கரத்தில் சிக்கின.
உடனே, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.