/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
சி.பி.ஐ., அதிகாரி என ரூ.1.19 கோடி ஆட்டை
/
சி.பி.ஐ., அதிகாரி என ரூ.1.19 கோடி ஆட்டை
ADDED : மே 16, 2025 11:40 PM
திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் மீராஉசைன், 82. இவருக்கு, சில தினங்களுக்கு முன், மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், 'நான் சி.பி.ஐ., அதிகாரி' என, அறிமுகப்படுத்தி, 'நாங்கள் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளோம்.
அவர் உங்களுடன் தொடர்பில் உள்ளார். உங்கள் ஆதார், பான்கார்டு எண்களை சோதனை செய்ததில், நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்துள்ளீர்கள்' என, கூறியுள்ளார். மேலும், 'நாங்கள் அனுப்பும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பாவிட்டால், நேரில் வந்து கைது செய்வோம்' என, மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன மீரா உசைன், தன் வங்கி கணக்கில் இருந்து, 55 லட்சம் ரூபாயும், மற்றொரு கணக்கிலிருந்து, 64.20 லட்சம் ரூபாயும் அனுப்பியுள்ளார்.
பின், அந்நபர் மீண்டும் போன் செய்தபோது, சுதாரித்த மீராஉசைன், நேற்று முன்தினம் இரவு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பல் குறித்து விசாரிக்கின்றனர்.