/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா துவக்கம்
/
திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா துவக்கம்
ADDED : ஆக 25, 2024 02:25 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
அதிகாலை, 4:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோவிலை சேர்ந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடந்தன.
கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காலை, 5:00 மணிக்கு கொடியேற்றம் துவங்கியது. 5:15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க ஹரிஹர சுப்பிரமணிய சிவாச்சாரியார் கொடியேற்றினார்.
பக்தர்கள், 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என, முழங்கினர். கொடிமரத்திற்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. வண்ண மலர்களாலும், தர்ப்பைப்புற்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டு சாத்தப்பட்டது. காலை, 6:30 மணிக்கு வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டு கொடிமரத்திற்கு மஹா தீபாராதனை நடந்தது.
விழாவின் பத்தாம் திருவிழாவான செப்., 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.