/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கடலில் கவிழ்ந்த இலங்கை படகு அகதி ஊடுருவலா என விசாரணை
/
கடலில் கவிழ்ந்த இலங்கை படகு அகதி ஊடுருவலா என விசாரணை
கடலில் கவிழ்ந்த இலங்கை படகு அகதி ஊடுருவலா என விசாரணை
கடலில் கவிழ்ந்த இலங்கை படகு அகதி ஊடுருவலா என விசாரணை
ADDED : மார் 08, 2025 12:50 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழை மீனவர்கள் சிலர் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கரையில் இருந்து, 9 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் கிடந்ததை பார்த்தனர்.
இலங்கையைச் சேர்ந்த நாட்டுப்படகு என தெரிய வந்தது. கவிழ்ந்த நிலையில் கிடந்ததால் யாரும் அருகே கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனரா என மீனவர்கள் தேடினர். யாரும் இல்லாத நிலையில், அந்த படகை கயிறு கட்டி இழுத்து பெரியதாழை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். குலசேகரன்பட்டினம் மரைன் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இலங்கை நாட்டில் உள்ள கல்பிடியா துறைமுகம், சின்னகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த படகு என தெரிய வந்தது. அதில், மீனவர்கள் யாரும் வந்தனரா அல்லது இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் யாரும் தமிழகத்திற்குள் நுழைந்தனரா என, விசாரணை நடக்கிறது.
படகு கவிழ்ந்த விபரம் குறித்து, இலங்கையில் உள்ள மீன்வளத்துறைக்கு, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முழு விசாரணைக்குப் பின், அந்த படகு சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என, மரைன் போலீசார் தெரிவித்தனர்.