sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி

/

கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி

கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி

கருணாநிதியின் கனவு திட்டத்தில் வேகம் இல்லை: அரசு மீது தென் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி


ADDED : ஆக 27, 2024 01:27 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் தண்ணீரை சேமித்து வைத்தாலும், அதன் துணை ஆறுகளில் இருந்து தாமிரபணி ஆற்றில் வெளியேறும் 13.8. டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது.

அந்த தண்ணீரை வறட்சி பகுதியான சாத்தான்குளம், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி துவங்கி வைத்தார். இதை, 'எனது கனவுத் திட்டம்' என நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் என்ற பெயரில் நான்கு கட்டங்களாக பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

கவலை


இதில், பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறுகளும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் 56,933 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

கன்னடியன் கால்வாயை அகலப்படுத்தி, கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாய் 3வது அணையில் இருந்து துாத்துக்குடி மாவட்டம், எம்.எல்., தேரி வரை 73.கி.மீ.,க்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது. 2012ல் பணிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு இதுவரை 631 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 80 சதவீத பணிகள் 2021ல் முடிவடைந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அப்பணிகள் விரைந்து முடிந்து திட்டம் நிறைவுபெறும் என, விவசாயிகள் காத்திருந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததே தாமதத்துக்கு காரணம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், கால்வாய் தோண்டும் பணிகள் தற்போது மந்தமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதே நிலை நீடித்தால், பருவமழை துவங்குவதற்கு முன் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சாஸ்தாவிநல்லுார் விவசாயிகள் நலச் சங்க செயலர் லுார்து மணி கூறியதாவது:

கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்கும்போது வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. 123 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாலைப்புதுார் குளத்துக்கு, தண்ணீர் வருவதற்கான பகுதி மட்டுமே பாக்கி உள்ளது.

தற்போது பணியை துவங்கினாலும் ஒரு மாதத்துக்குள் முடித்து விடலாம். போர்க்கால அடிப்படையில் அப்பணியை துவங்க வேண்டும் என, மக்கள் பிரதிநிதிகளிடமும், கலெக்டர்களிடமும் வலியுறுத்தி உள்ளோம்.

அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது பணிகள் வேகமாக நடந்தது. ஆனால், தற்போது அந்த வேகம் இல்லாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

வேண்டுகோள்


சாலைப்புதுார் குளம் தான், வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் கடைசிப் பகுதி.

இப்பகுதியில் கால்வாய் தோண்டிவிட்டால் திட்டம் முழுமையடைந்துவிடும். தி.மு.க., அரசு கூடுதல் கவனம் செலுத்தி, இத்திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது, கனவுத் திட்டம் என கூறி துவங்கிய வெள்ளநீர் கால்வாய்த் திட்டம், 15 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாத நிலை இருந்து வருகிறது.

அவரது நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், தி.மு.க., அரசு விரைந்து செயல்பட்டு அப்பணிகளை முடிக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கவன ஈர்ப்பு போராட்டம்

வெள்ளநீர் கால்வாய்த் திட்டத்தின் கடைசி குளமான எம்.எல்., தேரி சாலைப்புதுார் குளத்தை தாமிரபரணி தண்ணீர் சென்றடைய இன்னும் 2 கி.மீ., மட்டுமே கால்வாய் தோண்ட வேண்டியுள்ளது. அந்த பணி மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் பருவமழை துவங்குவதற்கு முன் பணிகள் நிறைவடைய வாய்ப்பு இல்லை.இந்த ஆண்டு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர்கள் போர்க்கால அடிப்படையில் அப்பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரு மாதத்துக்குள் பணியை முடித்துவிட்டால் விவசாயிகள் பயன்பெறுவர்.



பிரச்னையால் தாமதம்

திட்டம் தாமதம் குறித்து, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:வெள்ளநீர் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களில் 33,312; துாத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களில் 23,620 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும். இரு மாவட்டங்களிலும் 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன்பெறும்.இதனால், நிலத்தடி நீர் மட்டும் கணிசமாக உயரும். திட்டத்தின் கடைசி பகுதியான எம்.எல்., தேரியில் இன்னும் 2 கி.மீ., துாரத்துக்கு குறைவாகவே பணிகள் நடக்க வேண்டியுள்ளன. அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது இடம் பாதிக்கப்படும் என்பதால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு தொடுத்த நபர் தன் நிலம் பாதிக்காமல் இருக்க, தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் என கூறுகிறார். அப்பணியை செய்ய 1 கோடி ரூபாய் வரை செலவாகும். அந்த நிதிக்கு ஏற்பாடு செய்து, தடுப்புச் சுவர் கட்ட உறுதியளித்தால், தனிநபர் வழக்கை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. அதில் இருந்து ஒரு மாதத்துக்குள் பணியை முடித்துவிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.பணியை துவங்காவிட்டால் விரைவில் மக்களை திரட்டி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



பாசன நிலங்கள் அதிகரிக்கும்

சாலைப்புதுார் குளத்துக்கு தண்ணீர் வந்துவிட்டால், நிலத்தடி நீர் அதிகரிக்கும். இதனால், சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் உப்புத் தன்மை குறையும். நல்ல தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்பதால், கூடுதல் நிலங்களில் விவசாயம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.இப்பகுதிகளில் முருங்கை, தென்னை சாகுபடி தற்போது நடந்து வருகிறது. கூடுதலாக சாகுபடி நடைபெறும்போது, வறட்சி பகுதியாக கருதப்படும் அனைத்து இடங்களும் வளமை பெற வாய்ப்பு உள்ளது. தண்ணீர் உறுதியாக கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், ஆர்வத்துடன் கூடுதல் நிலங்களில் பாசனம் செய்யத் துவங்குவோம் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us