/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆளுங்கட்சியினர் துணையோடு மண் கொள்ளை அரங்கேற்றம்
/
ஆளுங்கட்சியினர் துணையோடு மண் கொள்ளை அரங்கேற்றம்
ADDED : பிப் 27, 2025 01:21 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி கடற்கரையில், ஆளுங்கட்சியினர் துணையோடு சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டு, உப்பளங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
துாத்துக்குடி முள்ளக்காடு பகுதியில், 10,000 ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன், உப்பு உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, உப்பளங்களில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு புதிதாக மண் கொட்டப்படுகிறது.
வழக்கமாக, வெளியிடங்களில் இருந்து லாரிகளில் மண் எடுத்து வரப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது, முள்ளக்காடு கடற்கரையில் பொக்லைன் இயந்திரங்களால் மண் அள்ளப்பட்டு, ஏராளமான லாரிகளில் தினமும் உப்பளங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆளுங்கட்சியினர் துணையோடு அரங்கேறும் இந்த சட்ட விரோத மண் திருட்டை, வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
ஒரு லாரி லோடு மண் 6,000 ரூபாய்க்கு உப்பளங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மண் கொள்ளையை தடுக்க, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சிலர் முயற்சி செய்தனர். ஆனால், வருவாய்த் துறையினர் புகார் அளிக்க மறுப்பதால், அவர்களால் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மண் கொள்ளை விவகாரத்தை மூடி மறைக்க வருவாய்த் துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், கலெக்டர் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.