/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி
/
முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி
ADDED : மே 15, 2024 08:50 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தில், பத்ரகாளியம்மன், செல்வ விநாயகர், மாரியம்மன், உச்சிமஹாகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கோவில் பூசாரிகளில் ஒருவர் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறுவது உண்டு. இந்த ஆண்டுக்கான திருவிழா மே 12ல் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான முள் படுக்கை அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது.
பத்ரகாளியம்மன், உச்சிமாகாளியம்மனுக்கு விரதம் இருந்த பூசாரி ஜெயபால் சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து மேள தாளம் முழங்க, பூசாரி ஜெயபாலை பக்தர்கள் முள் படுக்கைக்கு அழைத்து சென்றனர்.
முள் படுக்கையில் ஏறி அமர்ந்தும், படுத்தும் ஆடியபடியே சில பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.