ADDED : ஆக 07, 2026 06:31 AM
துாத்துக்குடி: பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார், சிலர் துரத்தி சென்றபோது, எதிரே வந்த வேன் மீது மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், நாயக்கன்பேட்டையை சேர்ந்தவர் வினோத் கண்ணன், 34. குலசேகரன்பட்டினம் கோவிலில் நேற்று முன்தினம் முடி காணிக்கை செலுத்தினார்.
அதன்பின், ஆறுமுகநேரியை சேர்ந்த உறவினர் லட்சுமணன், சுதாகர் ஆகியோருடன் ஒரு காரில் குரும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை லட்சுமணன் ஓட்டினார்.
ஆறுமுகநேரியை தாண்டியதும், ஹோட்டல் முன் சாலையோரத்தில் நின்ற பைக் மீது மோதிவிட்டு, கார் நிற்காமல் சென்றது. அங்கிருந்தவர்கள், பைக்கில் அந்த காரை விரட்டி சென்றனர். காரை ஓட்டிய லட்சுமணன் உட்பட மூவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் மாறி மாறி தறிகெட்டு ஓடிய கார், எதிரே வந்த வேன் மீது திடீரென மோதியது .
இதில், கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்த வினோத் கண்ணன் உயிரிழந்தார். லட்சுமணன், சுதாகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை துரத்தி சென்ற வாலிபர்கள் தங்கள் மொபைல்போனில் எடுத்த வீடியோவில், வேன் மீது கார் நேருக்குநேர் மோதும் காட்சி பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
