ADDED : பிப் 29, 2024 02:19 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி நல்லுாரை சேர்ந்தவர் பூகாந்த ரூபன், 28. திருச்செந்தார் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்தவர். நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. இதைக் கண்டித்த அவரது தாய், கிடைக்கும் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார்.
இந்நிலையில், வேலையில்லா விரக்தியில் இருந்த பூகாந்த ரூபன், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே கையில் பதாகையுடன் வந்துள்ளார். அதில் கூலிதொழிலாளிக்கு அரசு வேலை வேண்டும் என கோரியிருந்தார்.
நான்குவழிச்சாலையில் அங்கும் இங்கும் சென்றவர், திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டனர். பலத்த காயமடைந்த பூகாந்த ரூபன், 108 ஆம்புலன்ஸ் மூலம் துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

