திருச்செந்துார் கோவில் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
திருச்செந்துார் கோவில் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
ADDED : ஜூன் 04, 2026 11:18 PM
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டு சேர்ந்து, பக்தர்களிடம் பணம் பெற்று தரிசனத்திற்கு குறுக்குவழியில் அனுப்புவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த ன.
ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மே 29ல் திருச்செந்துார் கோவிலில், மாறு வேடத்தில், 'மாஸ்க்' அணிந்தபடி திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அவரிடமே தரிசனத்திற்கு பணம் வாங்கிய அர்ச்சகர் அய்யப்பன், அவருக்கு உடந்தையாக இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோவில் இணை கமிஷனர் ராமு, உதவி கமிஷனர் மெய்வேல் ஆகியோர் நேற்று, அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ராமு, சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கும், அந்த கோவில் இணை கமிஷனர் அருணாச்சலம், திருச்செந்துார் கோவிலுக்கும் மாற்றப்பட்டனர். உதவி கமிஷனர் மெய்வேல், மதுரை மீனாட்சி கோவிலுக்கும், அங்கிருந்த உதவி கமிஷனர் திருச்செந்துார் கோவிலுக்கும் மாற்றப்பட்டனர்.
திருச்செந்துார் கோவில் துணை கமிஷனராக, அறநிலையத்துறை திருச்சி துணை கமிஷனர் யக்ஞநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
