/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை
/
மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை
ADDED : செப் 03, 2011 01:45 AM
புதூர்:விவசாயத்திற்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளதால்,
விவசாயிகள் மாற்றுப் பயிராக மக்காச்சோளத்தை பயிரிட, விவசாயத்துறை ஆலோசனை
வழங்கியுள்ளது.தமிழகத்தில் 1.3 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் விவசாய
நிலங்கள் உள்ளன. இவற்றில் 63லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடக்கிறது. மொத்த
மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே தொழிலாக
கொண்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில், தொழிற்சாலைகள் பெருக்கம்
காரணமாக விவசாயத்திற்கான கூலி ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே கூலி
ஆட்களின் தேவையை குறைக்கும் வகையிலான பயிர்களை விளைவிக்க வேண்டியக்
கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, விவாசயத் துறை மாற்று பயிர் முறையை
அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் சாகுபடியில், தற்போது நடைமுறையில் உள்ள
பயிர்களுக்கு பதிலாக, மாற்றுப் பயிர்களை பயிரிட்டால் அதிக உற்பத்தி, லாபம்
பெற முடியும். அதிக வெப்பநிலை, மிதமான நீர் நிலை, வறட்சி ஆகிய தட்ப, வெப்ப
நிலையை கொண்ட மாவட்டங்களில் வாழை, பருத்தி, சூரியகாந்தி, வீரிய ஒட்டு
மக்காச்சோளம், சோயா பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிட்டால், அதிக வருமானம்
கிடைக்கும் குறிப்பாக வீரிய ஒட்டு மக்காச்சோள சாகுபடி, விவசாயிகளுக்கு நல்ல
பலனை அளிக்கும். மக்காச்சோள சாகுபடிக்கு குறைந்த அளவிலான வேலையாட்கள்
இருந்தாலே போதுமானது. அனைத்து வகை மண்ணிலும் ஆண்டு முழுவதும் மக்காச்சோள
சாகுபடியை செய்யலாம். நெற்பயிருடன் ஒப்பிடும் போது சாகுபடி செலவு இதற்கு
மிகவும் குறைவு. பூச்சி, புழு தாக்குதலும் குறைவாகவே இருக்கும் என்பதால்
மருந்து செலவு குறையும். தற்போது மக்காச்சோளத்திற்கான தேவை, நாடு முழுவதும்
அதிகரித்துள்ளது.
கோழி மற்றும் மாட்டுத் தீவனங்களுக்கு, மக்காச்சோளம் தான்
முக்கிய மூலப்பொருள் என்பதால், தீவன தயாரிப்பு தொழிற்சாலகள் அதிகமாக
கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளன. தமிழகத்தில் தேவைக்கேற்ற அளவு மக்காச்சோள
உற்பத்தி இல்லை என்பதால், தற்போது பீகார், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில்
இருந்து மக்காச்சோளம் கொண்டு வரப்படுகிறுது. ஒரு ஏக்கரில் இருந்து
சராசரியாக 2,500 முதல் 3000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இதன் மூலம் ஒரு
ஏக்கருக்கு செலவு போக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.