/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை மகிழ்விக்கும் மரகத பூஞ்சோலை
/
மக்களை மகிழ்விக்கும் மரகத பூஞ்சோலை
ADDED : செப் 08, 2024 12:12 AM

வெயில் நகரங்களின் வரிசையில் திருப்பூரும் இடம் பிடித்திருக்கிறது. கோடையில் கொளுத்தும் வெயிலில் வாடி வதங்கும் மக்களுக்கு, கோடை மாதங்களை நகர்த்துவது என்பது, பெரும் கடினம்.
இந்நிலையில், மரம் வளர்ப்பு வாயிலாக பசுமை போர்வையை விரித்து, வெயிலுக்கு குடை விரிக்கும் பணியை வனத்துக்குள் திருப்பூர் உட்பட பல்வேறு அமைப்புகள் செய்து வருகின்றன. வனமே இல்லாத திருப்பூருக்குள் வனத்தை கொண்டு வரும் முயற்சியில், அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மரக்கன்று நட்டு வளர்த்ததன் விளைவாக, நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டிவிட்டது.
இதில், வனத்துறையின் ஒரு பங்களிப்பாக, மரகத பூஞ்சோலை என்ற தமிழக அரசின் திட்டத்தின் வாயிலாக, கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெத்தாம்பாளையம் என்ற இடத்தில், மரகதப் பூஞ்சோலை உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 2.47 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், மலர் செடிகள், மரச்செடிகள், பழம் தரும் செடிகள் நடவு செய்யப்பட்டு; நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், குழந்தைகள் பூங்கா, பொதுமக்கள் அமர்ந்து இளைபாறுவதற்கான அறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாண்டு காலம் பராமரிப்பு பணி மேற்கொண்டு, மரக்கன்றுகளை வளர்த்தெடுக்கும் பணி மேற்கொள்ளும் வனத்துறை பின், அந்த ஊராட்சி வசம் பூஞ்சோலையை ஒப்படைத்துவிடும்.
மாநிலம் முழுக்க இதுபோன்று, 25 கோடி ரூபாய் செலவில், 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் பராமரிப்பும், மக்களின் பயன்பாடும் தான், பூஞ்சோலைகளை பூத்துக்குலுங்க செய்யும்.