/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு
/
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு
ADDED : மார் 13, 2025 11:36 PM

உடுமலை; சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகள், பல்வேறு சூழல் மாற்றங்களால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதையொட்டி அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை துவங்குவதற்கு, சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வீடுகளில் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து வெளியேறும், வேதியியல் கழிவு, புகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், வீடுகளின் அருகில் வருவதற்கு சிட்டுக்குருவிகள் அச்சப்படுகின்றன. இதனால் அவற்றை பாதுகாப்பதற்கு, பள்ளிப்பருவம் முதல் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும், வீடுகளில் இடம் உள்ள வரை தோட்டம் அமைப்பது, அந்த தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பூச்சிக்கொல்லி, ராசயன மருந்துகள் தெளிக்காமல் அவற்றை இயற்கை முறையில் பராமரிக்க வேண்டும்.
முடிந்த வரை வீட்டிற்கு வெளியில் அல்லது மாடி தளங்களில் தண்ணீர் வைப்பது, தானியங்களை துாவி அவற்றுக்கு உணவு அளிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதன் தொடக்கமாக, பள்ளியின் சுற்றுச்சுவரிலும் சிட்டுக்குருவிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் வைத்தனர்.