/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தை ஏற்படுத்தினால் பெர்மிட், லைசென்ஸ் ரத்து
/
விபத்தை ஏற்படுத்தினால் பெர்மிட், லைசென்ஸ் ரத்து
ADDED : ஜூலை 16, 2024 11:17 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - கோவை வழித்தடத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளால், ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் காரமடை போ7லீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கணேசன் பேசியதாவது:
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க, பயணிகள் ஏறி இறங்கும் பகுதிகளில், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் மொபைல் எண்:93848 08314 கொண்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். மாதந்தோறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், அளிக்கப்படும் புத்தாக்கப் பயிற்சியில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தனியார் மற்றும் அரசு பேருந்துகள், உரிய கால அட்டவணைப்படி இயக்க வேண்டும். பஸ் நிறுத்தத்தில் பாதுகாப்பாக பஸ்ஸை நிறுத்தி, பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும். நடத்துநர்கள் சீருடை மற்றும் பெயர் வில்லை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் கோவை சாலையில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தம்பு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வேகத்தடை மற்றும் பேரிகார்டு அமைக்க நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக் கொள்வது. மேலும் விபத்து ஏற்படுத்தும் விதமாக இயக்கப்படும் பேருந்துகள், அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், அதிக ஒலி எழுப்பும் பேருந்துகளின் அனுமதி சீட்டு மற்றும் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
_____