/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளைய பாரதத்தினாய் வா... வா... வா! தொழில்துறைக்கு 'புது ரத்தம்' பாய்ச்ச சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி
/
இளைய பாரதத்தினாய் வா... வா... வா! தொழில்துறைக்கு 'புது ரத்தம்' பாய்ச்ச சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி
இளைய பாரதத்தினாய் வா... வா... வா! தொழில்துறைக்கு 'புது ரத்தம்' பாய்ச்ச சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி
இளைய பாரதத்தினாய் வா... வா... வா! தொழில்துறைக்கு 'புது ரத்தம்' பாய்ச்ச சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி
UPDATED : செப் 01, 2024 02:58 AM
ADDED : செப் 01, 2024 02:36 AM

திருப்பூர்;பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு திருப்பூர் தயாராக உள்ளது. வரும் 4ம் தேதி துவங்க உள்ள 51வது இந்தியா சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி, இதைப் பறைசாற்றும் வகையில் அமைய உள்ளது. கண்காட்சியின் ஒரு பகுதியாக இளம் தலைமுறையினரை தொழில் மேம்பாட்டுக்கு அழைக்கும் வகையிலான கருத்தரங்கும் நடைபெற உள்ளது.
இந்தியா நிட்பேர் அசோசியேஷன்(ஐ.கே.எப்.ஏ.,), ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து, இந்தியா சர்வதேசப் பின்னலாடை கண்காட்சிகள் 50 முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில், 51வது இந்தியா சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி, வரும் செப்., 4ல் துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும்; சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பூமியை பாதுகாக்க மறுசுழற்சி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை மையமாக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
இளம் தலைமுறைக்கு அறைகூவல்
கண்காட்சி குறித்து, இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் பகிர்ந்துகொண்ட தகவல்கள்:
பசுமை சார் உற்பத்தி படிநிலைகளை விளக்கி, இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் நடத்தியிருக்கிறோம். சமீப காலமாக ஏற்றுமதி மட்டுமல்ல, திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதிகளவு ஆர்டர் கிடைத்து வருகிறது. கண்காட்சியில், 'பிராண்டட்' நிறுவனங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியின் ஒரு பகுதியாக, நான்கு கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளது. இளம் தலைமுறையினரை தொழில் மேம்பாட்டுக்கு அழைக்கும் வகையிலான கருத்தரங்கும் இடம்பெறும். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை விளக்கும் வகையில், 51வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடத்தப்படும்.
'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்'
ஐரோப்பியாவின் மற்றொரு எதிர்பார்ப்பு, 'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' என்ற வில்லை, 'டி-சர்ட்'டில் பொருத்தப்படும்; இதை 'ஸ்கேன்' செய்தால், பஞ்சு மற்றும் நுால் வாங்கிய விவரம், சாயமிடப்பட்ட அனைத்து விவரம், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் செய்த விவரம் என, அனைத்து விவரங்களும் தெரியவரும்.
அதற்காகவே, ஒவ்வொரு ஆடைகளுக்கும், 'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' என்ற அடையாள அட்டை பொருத்தவும் திருப்பூர் தயாராகிவிட்டது. ஐரோப்பாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; அதற்கான முயற்சிகளை, நாங்கள் கூட்டாக மேற்கொண்டு வருகிறோம்.
ஏழு நகரங்களில் கருத்தரங்கு
'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' திட்டத்துக்கு நாம் தயாராகும் வகையில், நாட்டில் உள்ள, ஏழு கிளஸ்டர்களில், கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிகம் பேர் பங்கேற்று, விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இனி, அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஐரோப்பா உட்பட, வளர்ந்த நாடுகள் எதிர்பார்க்கும் பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு திருப்பூர் 'ரெடி' என்பதை, வர்த்தகர்களிடம் எடுத்துரைக்கும் வகையில், 51வது ஐ.கே.எப்., கண்காட்சி அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
----
திருப்பூரில் நடைபெற உள்ள 51வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி குறித்து பேசிய இந்தியா நிட்பேர் அசோசியேஷன்(ஐ.கே.எப்.,) தலைவர் சக்திவேல். அருகில், (இடமிருந்து) ஐ.கே.எப்., செயலாளர் சண்முகசுந்தரம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமை கூட்டமைப்பு தலைவர் இளங்கோ, ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் ராமு.