/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ - நாம் திட்டத்தில் கொப்பரைக்கு கூடுதல் விலை
/
இ - நாம் திட்டத்தில் கொப்பரைக்கு கூடுதல் விலை
ADDED : ஜூலை 06, 2024 02:12 AM
உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் ஏலத்தில், கூடுதல் விலை கிடைப்பதால், விவசாயிகள் அதிகளவு கொப்பரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, உடுமலை, காந்திநகர், எலையமுத்துார், உரல்பட்டி, பணத்தம்பட்டி, விளாமரத்துப்பட்டி, போடிபட்டி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 17 விவசாயிகள், 77 மூட்டைகளில், 3 ஆயிரத்து, 850 கிலோ கொப்பரை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இ - நாம் திட்டத்தின் கீழ், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.85.96 முதல், ரூ.92.16 வரையும், இரண்டாம் தரம், ரூ.67.69 முதல், 82.26 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நடக்கும் கொப்பரை ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்று, கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். வாரம்தோறும், முதல் மற்றும் இரண்டாம் தர கொப்பரை விலை உயர்ந்து வருகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.