/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகள் தீரும்; நம்பிக்கை குறையாத மக்கள்
/
குறைகள் தீரும்; நம்பிக்கை குறையாத மக்கள்
ADDED : ஆக 19, 2024 11:59 PM

திருப்பூர்:மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மக்களிடமிருந்து மொத்தம் 752 மனுக்கள் பெறப்பட்டன.
பட்டா இடம் ஆக்கிரமிப்பு?
அவிநாசி தாலுகா, காளிபாளையத்தில், 18 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியலின மக்கள் 27 பயனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை தனியார் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வீட்டுமனை பட்டா பெற்ற மக்கள், கருப்பு துணியால் கண்களை கட்டியவாறு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்; கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வயநாடுக்காக நிதி
திருப்பூர் வாவிபாளையம் அரசு பள்ளி மாணவியர், வயநாடு நிலச்சரிவில் பாதித்த மக்களுக்காக திரட்டிய நிதியை, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
மினி பஸ்கள் நிறுத்தம்
பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் அளித்த மனு:
பல்லடம் நகரின் மத்தியில் அமைந்துள்ள பச்சாபாளையம் பகுதியில் இயங்கிய மினிபஸ்கள், சமீபகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், பெண்கள், தொழிலாளர்கள் பஸ் வசதியின்றி பரிதவிக்கின்றனர். பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வரை, ஆட்டோக்களில், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். மினிபஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனுமதி கூடாது
குன்னத்துார் பகுதி அனைத்து கட்சியினர் அளித்த மனு:
ஊத்துக்குளி தாலுகா குன்னத்துார் பேரூராட்சி 10வது வார்டில், தனியார் மன மகிழ் மன்றம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்பு, பள்ளி, கோவில் அமைந்துள்ள பகுதியில், மன மகிழ் மன்றம் அமைத்தால், மக்களுக்கு இடையூறு ஏற்படும்; அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர்.
மனுக்களுக்கு பதில் இல்லை
சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அளித்த மனு:
மக்கள் அடிப்படை பிரச்னைகள் சார்ந்து கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்ட கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மனுவுக்கு பதில் கூட அளிப்பதில்லை.
மனுக்களுக்கு, 15 நாட்களுக்குள் துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளிக்க, கலெக்டர் உத்தரவிட வேண்டும்.