/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளத்தில் தென்னையில் நோய் தாக்குதல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
/
மடத்துக்குளத்தில் தென்னையில் நோய் தாக்குதல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
மடத்துக்குளத்தில் தென்னையில் நோய் தாக்குதல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
மடத்துக்குளத்தில் தென்னையில் நோய் தாக்குதல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 06, 2025 10:03 PM

உடுமலை, ; மடத்துக்குளம் வட்டாரத்தில், தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், 6 ஆயிரத்து, 262 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி, பாப்பான்குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இப்பகுதிகளில் ஆங்காங்கே தஞ்சாவூர் வாடல் நோய் மற்றும் சுருள் வெள்ளை பாதிப்புகள் தென்பட்டன. நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது குறித்து, தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:
தஞ்சாவூர் வாடல் நோயின் அறிகுறிகளாக, மரத்தின் ஓலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிய பின், அடிமட்டைகள் பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து மரத்தோடு ஒட்டித்தொங்கும்.
பாதிக்கப்பட்ட மரத்தின் அடிப்பாகத்திலிருந்து, 3 அடி உயரம் வரை செம்பழுப்பு நிற சாறு வடியும்; அதன் தண்டுப்பகுதியை வெட்டிப்பார்த்தால் அழுகி நிறம் மாறி காணப்படும்.
வேர்களும் அதிகளவில் அழுகி, நிறம் மாறி, எண்ணிக்கையில் குறைந்து காணப்படும். சில நேரங்களில் அனைத்து குரும்பைகளும், இளம் காய்களும் உதிர்ந்து விடும்.
இந்நோய் அதிக அளவில் தாக்கப்பட்ட மரங்களில் சைலிபோரஸ் என்ற பட்டை துளைப்பான் கூன் வண்டின் தாக்குதலும் காணப்படும். மழைக்காலங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் கேளோடெர்மா பூஞ்சானம் காளான் போன்று காணப்படும்.
இது தடிமனாகவும், கடினமாகவும் கருஞ்சிவப்பு நிற மேல் பகுதியையும், வெள்ளை நிற அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். இது போன்ற அறிகுறிகள் அனைத்தும் ஒருங்கே காணப்பட்டால் மரமானது ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டிற்குள் இறந்துவிடும்.
கோனோடெர்மா லுாசிடம் என்னும் காளான் வகை பூஞ்சாணம் தாக்குவதால், தஞ்சாவூர் வாடல் நோய் ஏற்படுகின்றன.
இந்நோய், ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு மண் மற்றும் பாசன நீர் வாயிலாக பரவுகிறது. இது மண்ணில் நீண்ட காலம் வாழும் தன்மையுடையது.
இதனை கட்டுப்படுத்த, ஹெக்சாகோனசோல், 2 மில்லி மருந்தை 100 மில்லி நீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கிய மரங்களுக்கு வேர் வழியாக உட்செலுத்த வேண்டும்.
மேலும், டிரைகோடெர்மா விரிடி, 100 கிராம், பேசில்லஸ் சப்டிலிஸ், 100 கிராம் என்ற அளவில், 50 கிலோ மக்கிய சாண எருவுடன் கலந்து நோய் தாக்கப்பட்ட மரங்களின் அடியே வட்டப் பாத்தியில் உள்ள மண்ணில் இடவேண்டும்.
ஆண்டுக்கு, 50 கிலோ மக்கிய சாண எரு மற்றும், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். வாழையை ஊடுபயிர் செய்வதன் வாயிலாக நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.
மரத்தைச் சுற்றி வட்டப் பாத்திகள் அமைத்து, தனித்தனியே சொட்டு நீர் பாசன முறை வாயிலாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மற்ற மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, துங்காவி குறுவட்ட விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன், 80721 94140, 96598 38787 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் குறுவட்ட விவசாயிகள் பூவிகாதேவி, 80720 09226 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.