/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கான அடையாள அட்டை செல்லமுத்து வரவேற்பு
/
விவசாயிகளுக்கான அடையாள அட்டை செல்லமுத்து வரவேற்பு
ADDED : செப் 11, 2024 01:29 AM

பல்லடம்:மத்திய அரசு சார்பில், விவசாயிகளுக்கான, விவசாய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, உழவர் உழைப்பாளர் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து அதன் மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது: ஆதார் அட்டையை போல, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரத்யேகமான விவசாய அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக, 2,817 கோடி ரூபாய் ஒதுக்கி டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு மானியத்துக்கு விண்ணப்பிப்பது மட்டுமன்றி, பல்வேறு திட்டங்களுக்காக அரசுத் துறைகளை அணுகும் போது, ஆதார், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை விவசாயிகள் தேடாமல், மத்திய அரசு வழங்கும் இந்த விவசாய அட்டையை பயன்படுத்தினாலே போதுமானது. இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதால் இதை வரவேற்கிறோம். இத்திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரவேண்டும்.
இதேபோல், விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் நீண்ட காலமாக சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
விவசாயிகள் பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள அடையாள அட்டை திட்டத்துடன், விளை பொருட்களுக்கு விலை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.