/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் வரத்து அதிகரித்தது
/
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் வரத்து அதிகரித்தது
ADDED : ஆக 29, 2024 10:16 PM

உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் உயர்ந்து வருகிறது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, பொள்ளாச்சி, சின்னவீரம்பட்டி, பணத்தம்பட்டி, உடுமலை, விளாமரத்துப்பட்டி, புக்குளம், கோவை, போடிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 29 விவசாயிகள், 80 மூட்டை அளவுள்ள, 4 ஆயிரம் கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.99.89 முதல், ரூ.103.69 வரையும், இரண்டாம் தரம், ரூ. 82.33 முதல், 97.99 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. மொத்தம், 3.68 லட்சம் ரூபாய் மதிப்பில் நேற்று கொப்பரை விற்பனை நடந்தது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் ஏலத்தில், கொப்பரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று நடந்த ஏலத்தில், அதிகளவு விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த நிலையில், வியாபாரிகளும் அதிகளவு பங்கேற்றனர்.
கொப்பரைக்கான விலையும், 5 முதல், 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தென்னை மகசூல் சீசன் குறைந்துள்ள நிலையில், தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.

