/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடுப்பணை கொள்ளளவு உயர்த்துங்க! பல கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தடுப்பணை கொள்ளளவு உயர்த்துங்க! பல கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
தடுப்பணை கொள்ளளவு உயர்த்துங்க! பல கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
தடுப்பணை கொள்ளளவு உயர்த்துங்க! பல கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:49 AM
உடுமலை:சின்னப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில், தடுப்பணையை உயர்த்தி கட்டி, பருவமழை காலங்களில், கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியம், பாப்பனுாத்து, புங்கமுத்துார், தேவனுார்புதுார் உட்பட பல்வேறு கிராமங்களில் உருவாகும் மழை நீர் ஓடைகள், நல்லாற்றுடன் இணைந்து மேற்கு நோக்கி செல்கின்றன.
அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமான இந்த மழை நீர் ஓடைகளின் குறுக்கே, பல்வேறு திட்டங்களின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலத்தில், மழை நீர் ஓடைகளில் அதிக நீர் வரத்து இருக்கும்; மழைக்காலத்தில், பாசன திட்ட உபரி நீரும், ஓடைகளில் செல்கிறது.
இவ்வாறு, ஓடைகளில் சென்று, தடுப்பணைகளில், தேங்கும் தண்ணீரே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது. இவ்வாறு, பாப்பனுாத்து, புங்கமுத்துார் கிராமங்கள் வழியாக சின்னப்பள்ளம் செல்கிறது. பள்ளத்தின் குறுக்கே, அதிக உயரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணையில், போதியளவு தண்ணீர் தேங்குவதில்லை.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: பருவமழைக்காலத்தில், ஓடைகளில் செல்லும் தண்ணீரை தேக்க தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
சின்னப்பள்ளம் உட்பட ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை உயர்த்தி கட்டினால், கூடுதலாக தண்ணீர் தேங்கும்; நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
வழியோரங்களில் கூடுதலாகவும் சிறிய தடுப்பணைகள் கட்டலாம். இது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.