/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரம் வளர்ப்போம்; தகவல் பலகையில் மட்டும்! கருகும் மரங்களை காப்பது யார்?
/
மரம் வளர்ப்போம்; தகவல் பலகையில் மட்டும்! கருகும் மரங்களை காப்பது யார்?
மரம் வளர்ப்போம்; தகவல் பலகையில் மட்டும்! கருகும் மரங்களை காப்பது யார்?
மரம் வளர்ப்போம்; தகவல் பலகையில் மட்டும்! கருகும் மரங்களை காப்பது யார்?
ADDED : மே 07, 2024 01:19 AM

உடுமலை;'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்,' என பல இடங்களில், விழிப்புணர்வு பலகை வைத்துள்ள நெடுஞ்சாலைத்துறையினர், ரோட்டோர மரங்களுக்கு தண்ணீர் ஊற்றாமல், கருகச்செய்வது அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகள், மாவட்ட இதர சாலைகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரோட்டோரங்களில், பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் முன்பு திருமூர்த்திமலை உள்ளிட்ட ரோடுகளில் நடப்பட்ட புளியமரம் உள்ளிட்ட மரங்கள் செழித்து வளர்ந்து, நிழல் பரப்பி வருகின்றன.
ஆனால், பிற ரோடுகளில், கடந்த 10 ஆண்டுகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளில் போதிய மழை பெய்யாமல், கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்து, விவசாயம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தற்போதைய தருணத்தில், மரக்கன்று வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு என பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை என விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஏற்கனவே ரோட்டோரங்களில் நடப்பட்ட மரங்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. மேலும், குப்பையை குவித்து தீ வைத்து எரிப்பதால், மரங்கள் வேருடன் கருகும் அவலமும் நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், முக்கிய ரோடுகளில், 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்,' என்ற விழிப்புணர்வு வாசகத்தை உள்ளடக்கிய தகவல் பலகையை அனைத்து ரோடுகளிலும் வைக்க கணிசமான தொகை செலவிடப்படுகிறது.
இவ்வாறு, பலகை வைத்துள்ள துறையினர், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள மரங்கள் தண்ணீரின்றி கருகி வருவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வருவது அனைத்து தரப்பினரையும் வேதனையடையச்செய்துள்ளது.
பசுமை இழந்து வரும் ரோடுகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களும், வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். முன்பு, ரோட்டோர மரங்களை பராமரிக்க, டிராக்டரில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுதல், தடுப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இப்பணிகள் முழுவதும் கைவிடப்பட்டு, பெயரளவுக்கு மரக்கன்றுகள் நட்டு, அதன் பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால், ரோட்டோரத்திலுள்ள, பல்லாயிரக்கணக்கான மரங்கள் பசுமையிழந்து முற்றிலுமாக கருகும் முன், நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.