/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எம் மாணவர் பயனுற வேண்டி வல்லமை தந்தனர்... விருது வென்றனர்!
/
எம் மாணவர் பயனுற வேண்டி வல்லமை தந்தனர்... விருது வென்றனர்!
எம் மாணவர் பயனுற வேண்டி வல்லமை தந்தனர்... விருது வென்றனர்!
எம் மாணவர் பயனுற வேண்டி வல்லமை தந்தனர்... விருது வென்றனர்!
ADDED : செப் 06, 2024 03:20 AM

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், 11 பேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விருது பெற என்னென்ன முறையில் பணியாற்றினர் என்பது குறித்து, விருது பெற்ற ஆசிரியர்கள் சொல்வது என்ன?
'பெற்றோருக்கு நம்பிக்கையை தந்தேன்'
- -- அருணா, தலைமை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரப்பாளையம்.
ஆன்லைன் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த போது, 36க்கும் மேற்பட்டோர் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு விருது கிடைக்குமென எதிர்பார்க்கவே இல்லை. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 1988ல் இடைநிலை ஆசிரியராக பணியில் இணைந்தேன்.
காதர்பேட்டையில் நடுநிலைப்பள்ளி அடிப்படை வசதி இல்லாத நிலையில் இருந்தது. அதனை மீட்டு கொண்டு வந்து பள்ளிகளில் புதிய கட்டடங்களை கட்ட முயற்சி எடுத்தேன். பெற்றோர் மகிழ்ந்தனர். எந்த பள்ளியில் இணைந்தாலும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுத்த ஏதேனும் முயற்சி எடுக்க முடியுமா என்பதை தான் நோக்கமாக கொண்டு பணியாற்ற வேண்டும். கடந்த, 2015 பாரப்பாளையம் பள்ளியில், மாணவர் இடைநிற்றலை குறைத்து, வருகைப்பதிவு அதிகப் படுத்தினேன்.குறிப்பாக, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்க பலரும் தயக்கம் காட்டிய நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு தந்து பள்ளியில் இணைத்தேன். இதனால், பெற்றோர் மகிழ்ந்தனர். அக்குழந்தைகளுக்கும், பெற்றோருக்கு நம்பிக்கையை தந்தேன். நல்லாசிரியர் விருதுக்கு எனக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.
மலைவாழ் மக்கள் பாராட்டு
- தர்மராஜ், தலைமை ஆசிரியர்
முள்ளுப்பட்டி, ஊ.ஒ.துவக்கப்பள்ளி
உடுமலை.
1999ல் ஆசிரியராக பணியில் இணைந்தேன். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கற்றலின் இனிமை மாவட்ட கருத்தாளராக பணிபுரிந்துள்ளேன். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குருமலை துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த போது மலைவாழ் மக்கள் பாராட்டும் வகையில் பணிபுரிந்தேன்.
தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வருவதால், உடுமலை ரத்ததான சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. பட்டிமன்ற பேச்சாளராக உள்ளேன். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளார். புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் மாவட்ட பேச்சு போட்டியில், முதல் பரிசு பெற்றுள்ளேன். கேரள மாநிலம் சித்துார், பரிசுக்கல், நெம்மாரா, வண்ணாமடை, முதல் மடை, மறையூர் போன்ற பள்ளிகளில் தமிழின் பெருமை, இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளேன்.
'தினமலர் வாழ்த்தியது'
----------------------
நாட்டுப்புற பாடல் வாயிலாக, கலாச்சாரம், பண்பாட்டை விதைக்கும் முயற்சியை பாராட்டிய தினமலர் நாளிதழ் 'மண் மணக்கும் நாட்டுப்புற பாடல்களில் விழிப்புணர்வு - ஆசிரியர் மெட்டில் மெய் மறக்கும் மாணவர்கள்' எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. என் பணியை பாராட்டி, 2016 ல் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.----------------------
ஆங்கில வழிக்கல்வி
அட்மிஷன் அதிகரித்தேன்
- பாரதி, தலைமை ஆசிரியர், கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மூலனுார், தாராபுரம்.
கடந்த, 1995ல், இடைநிலை ஆசிரியர். 2001 ல் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். 2011 முதல் கன்னிவாடி தலைமை ஆசிரியர். இப்பள்ளிக்கு நான் வந்த போது மாணவர்கள் எண்ணிக்கை, 25 ஆக இருந்தது. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, பெற்றோர் பலரை வீடுவீடாக சென்று சந்தித்தேன்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி குறித்து எடுத்துக்கூறி, அட்மிஷனை அதிகரித்தேன். கல்வி மாவட்ட அலுவலர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பால், பள்ளியில் மாணவ, மாணவியர் எண்ணிக்கையும் உயர்ந்தது. பெற்றோரும் முழு ஒத்துழைப்பு வழங்கினர். விருது பெற்றுள்ள இந்த தருணத்தில், எல்லா நிலைகளிலும், எங்கள் பள்ளிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெற்ற மகிழ்ச்சியில் இன்னமும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன்.--------------------
பிறந்த நாளில் மரக்கன்று
- கனகராஜ்
சிறப்பாசிரியர் (ஓவியம்)
வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி
அய்யங்காளிபாளையம்.
திருப்பூர்.
பத்தொன்பது ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி வருகிறேன். அவ்வகையில், நான் பணியாற்றும் பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, மரங்களாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு மாணவரின் பிறந்தநாளுக்கும் ஒரு மரம் பள்ளி வளாகத்தில் நடுகிறோம்.நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் மூலமாக கொடுத்து வருகிறேன். இதனால், பள்ளி ஒரு பசுமை சோலையாக உருவாகி இருக்கிறது. தன் வாழ்நாளில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளும் மாணவன்; கல்வியில் சிறப்புற்று வருவான். எனவே, மாணவச் செல்வங்களுக்கு நான் கல்வியோடு கூடிய நல் ஒழுக்கத்தையும் சமுதாயம் பற்றியும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க சொல்லித்தர வேண்டும்.
மாணவர் உடல் நலன் பேண நேரம் ஒதுக்கி, யோகா கற்றுத்தருகிறேன். எனது பணியை பாராட்டி தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன். விருது எனக்கொரு உந்து சக்தியாக இருக்கும்.--------------------------
நெகிழி விழிப்புணர்வில் நாட்டம்
- சிவராஜ்
இடைநிலை ஆசிரியர்
பூளவாடி ஊ.ஒ.துவக்கப்பள்ளி
குடிமங்கலம், உடுமலை.
ஆசிரியர் பணி என்பது ஒரு அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதற்கேற்ப எனது ஆசிரியர் பணியை செய்து வருகிறேன். விடுப்பும் எடுக்காமல் நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் சிறந்த கருத்தாளராக பணியாற்றி உள்ளேன்.
தன்னார்வலர்கள் உதவியுடன் மூன்று வகுப்பறைக்கு டைல்ஸ் ஒட்டப்பட்டது. மற்றும் மூன்று வகுப்பறைக்கு வட்டமேஜையும் நாற்காலியும் வழங்கப்பட்டது. கொரானா கால கட்டத்தில் அரசின் கல்வி 'டிவி' யில் பாடம் எடுத்தல். மாணவர்களை களப்பயணம் அழைத்து செல்லுதல், பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பணியை மேற்கொண்டேன்.
ரத்ததானம் செய்வதுடன், மாணவர்களுடன் இணைந்து, பிளாஸ்டிக்கை தீமை குறித்து, பிளாஸ்டிக் இல்லாத நெகிழி பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
----------------------------
எனது ஆசிரியருக்கு சமர்ப்பனம்
- ைஷலஜா
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
காந்திஜிநகர் காலனி, தாராபுரம்.
கடந்த, 14 ஆண்டுகளாக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக உள்ளேன். மாணவர் சேர்க்கை, கலை, இலக்கியம், அறிவியல் கண்காட்சி, கல்வி மற்றும் சமுதாயப்பணியில் ஆற்றிய பங்களிப்புக்கு, ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. இதனால், மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது.
விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும், எனக்கு பாடம் கற்பித்த என் அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். விருது மிகுந்த ஊக்கத்தை தந்துள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து எனது பணி ஆற்றுவேன் என உறுதியாக உணர்கிறேன்.
----------------
விழிப்புணர்வுக்கு கிடைத்த பரிசு
பால்ராஜ்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
ஆச்சியூர், தாராபுரம்.
கடந்த, 1999 ல் இடைநிலை ஆசிரியர். 2008 பட்டதாரி ஆசிரியர். கடந்த 2007 ல், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் சிகரம் தொட்ட ஆசிரியர் விருது பெற்றுள்ளார். கல்வி பணி மட்டுமின்றி ஆதரவற்ற மாற்றுத்திறனாளி, நோயாளிகளுக்கு உணவு, உடைகளை வழங்கி வருகிறார். கல்வியில் மிகவும் பின்தங்கிய அரசு பள்ளியில் பயின்ற விளிம்பு நிலை மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட பயிற்சி மற்றும் நீட் பயிற்சி வழங்கினோம். 2020 ல் தாராபுரம் கல்வி மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார். சுற்றுச்சூழல் முகமை ஒருங்கிணைப்பாளராக செயல்படும் இவர், கிராமத்துக்கு மாணவர் அதிகளவில் பள்ளிகளில் இணையவும், மதிப்பெண் பெறவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறார்.பள்ளி ஜே.ஆர்.சி., மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். புதுடில்லியில் நடந்த பயிற்சி ஒன்றில் பங்கேற்று, தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், தமிழர்களின் பெருமையை விளக்கி பேசியதற்கு பாராட்டு கிடைத்தது.--------------
உயர்கல்விக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்
செல்வக்குமார்
அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்
மங்கலம், திருப்பூர்.
தமிழக அரசு இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்தது என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. தரமான கல்வியை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
வரும் நாட்களில் என் கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக செய்வேன். கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி செல்வதற்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். அரசு பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.--------------------
புதுமையான கல்வி முறைகளை பின்பற்றினேன்
- சுமதி
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
சேகாம்பாளையம், பல்லடம்.
பெங்களூரு நியூ கரேசன் கல்லுாரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தேன். பள்ளிகல்வித்துறையில், 2011 ல் இணைந்தேன். அரசு பள்ளி ஆசிரியராக இணைந்த போது, ஆங்கிலமோ படிக்க முடியாமல் பல மாணவர் இருந்த நிலை கண்டு வருந்தினேன்; அவர்களுக்கு ஆரம்ப ஆங்கில கல்வியை எளிய முறையில் போதிக்க துவங்கினேன். கொரோனா காலத்தில், ஆன்லைன் கல்வி ரேடியோவில் எளிமையாக ஆங்கிலம் கற்பது எப்படி என்பன உள்ளிட்ட பாடங்களுக்கு வாய்ஸ் கொடுத்தேன். ஆங்கில இலக்கியம் குரல் மூலம் மாணவர்களை சென்றடைந்தது, பெரும் உற்சாகத்தை தந்தது.
புதுமையான கல்வி முறையை யோசித்து, கற்றல் குறைபாடு உடைய, கல்வியின் பின்தங்கிய மாணவருக்கு பாடல் வழியாக, நகைச்சுவை மூலம் கல்வி கற்றுத்தர முயற்சித்தேன். 'ஆர்டிபிஷியல் இன்டலிஜண்ட்' மூலம் தெனாலிராமன் கதைகள் மறுஉருவாக்கம் செய்து குழந்தைகளை கவர்ந்துள்ளேன். கல்வி கற்கண்டாக இனிக்க வேண்டும். செய்யுள்களை பாடல்களை போல் மெட்டாக மாற்றி படிக்க வைத்துள்ளேன். குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆங்கில அறிவு, பேச்சு, கிடைக்க இயன்றவரை தொடர்ந்து பணியாற்றுவேன்.-----------------
பெற்றோரின் கனவு நிறைவேறியது
- செல்வராஜ்
பட்டதாரி ஆசிரியர்
ஸ்ரீ.ந.வெ., அரசு மேல்நிலைப்பள்ளி
எலையமுத்துார்
உடுமலை.
கடந்த, 1999 ல் இடைநிலை ஆசிரியர்; 2014 ல் பட்டதாரி ஆசிரியர். கற்றலை எளிமையாக்கி பொது அறிவினை வளர்க்க, இனிமையுடன் தமிழை கற்க, செய்யுளை எளிமையாக்கி பாடல் வடிவில் தருகிறேன். கொரோனா காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி பாராட்டு பெற்றுள்ளார்.
எனக்கு இவ்விருது கிடைக்க முதற்கண் மாணவர், பெற்றோர் ஒத்துழைப்பு உறுதுணையாக அமைந்தது. மாநில நல்லாசிரியர் விருது எனக்கு உத்வேகத்தை தந்துள்ளது. இந்த விருது கிடைத்ததால், என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது. ஓய்வையும், தொய்வையும் தவிர்த்து சுறுசுறுப்பாக இயங்க செய்யும். மீண்டும் என்னை புதுப்பித்துக் கொள்ள துாண்டுதலாக உள்ளது. விருதின் மூலம் கிடைக்கும் 10 ஆயிரம் ரூபாயைக் கொண்டு எங்கள் பள்ளிக்கு புதிய ஒலிபெருக்கி வாங்குவேன்; மாணவர்களின் பேச்சுத்திறமையை வளர்ப்பேன்.----------------------------
பாடக்குழுவில் பணி
பூரணி
தலைமை ஆசிரியர்
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி
உடுமலை.
இருபத்தி எட்டு ஆண்டுகள் கணிதவியல் ஆசிரியராகவும், பின், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். எப்போதும், நுாறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை நோக்கி பள்ளியை பயணிக்க செய்பவர். இதனால், இவரிடம் படித்த மாணவ, மாணவியர் கணிதம் பாடத்தில், சென்டம் ரிசல்ட் அதிகளவில் பெற்றுள்ளனர்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புதிய கணித பாடப்புத்தகம் உருவாக்க அமைக்கப்படும் பாடத்திட்டக்குழுவினர் இடம் பெற்றுள்ளார்; புதிய பாடத்திட்டம், புத்தக உருவாக பங்காற்றியுள்ளார். மாணவர்களின் தமிழ் பற்று மீதான ஆர்வத்தை துாண்ட, ஒவ்வொரு ஆண்டும் மகாகாவி பாரதியார் பெயரில் போட்டிகைள நடத்தி, பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
-----------------------------------------