/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் பயணிகளிடம் நுாதன வழிப்பறி
/
ரயில் பயணிகளிடம் நுாதன வழிப்பறி
ADDED : ஆக 04, 2024 05:16 AM

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளிடம் நுாதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 25. திருப்பூர் நல்லுாரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். டிக்கெட் உறுதியாகவில்லை.
நேற்று ரயில்வே ஸ்டேஷன் சென்ற ராஜ்குமார், ரயில்வே பணியாளரிடம் விவரங்களை கேட்டறிந்தார். ராஜ்குமாரை நோட்ட மிட்டு கொண்டிருந்த, வடமாநில வாலிபர் ஒருவர், தனது மாமா டிக்கெட் பரிசோதகராக இருப்பதாகவும், டிக்கெட்டை உறுதி செய்து தருவதாகவும் கூறினார்.
இதை உண்மை என நம்பி, ஆயிரம் ரூபாயை, அந்நபருக்கு போன் வாயிலாக அனுப்பினார். ராஜ்குமாரிடம் அதிகம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வாலிபர், திடீரென அவரை மிரட்டி மொபைல் போனை பறித்து, தனது நண்பனின் வங்கி கணக்குக்கு, 80 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்து விட்டு, தப்பி சென்றார்.
ராஜ்குமார் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ராஜ்குமாரின் போன் வாயிலாக பணம் அனுப்பிய எண்ணை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, முதலிபாளையத்தில் தங்கியிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த தீபக்குமார், 21, பாபுகுமார், 23 என, இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், அவ்வப்போது பலரிடமும் இதுபோன்று கைவரிசை காட்டி வந்தது தெரிந்தது.