ADDED : ஆக 06, 2024 11:26 PM

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, காட்டன் மில் ரோடு, குமாரசாமி நகரில் உள்ள ஒரு சென்ட் இடத்தை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியினர் உடற்பயிற்சி கூடம் அமைத்து பயன் படுத்தி வந்தனர்.
இந்த இடம் குறித்து, சித்ரா, என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், சித்ரா மற்றும் அவரது மகளுக்கு சொந்தமான இடம் என கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனையடுத்து, இடத்தை மீட்டு தருமாறு சித்ரா, வருவாய்த்துறை மற்றும் போலீசிடம் முறையிட்டார்.
இந்நிலையில், பிரச்னைக்குரிய இடத்தில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. கோர்ட்ட உத்தரவுபடி நிலத்தை கையகப்படுத்தி உரியவரிடம் ஒப்படைக்க வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், தலைமையில் போலீசார் வந்தனர்.
ஆனால், இடத்தை கையகப்படுத்தக்கூடாது, என அப்பகுதியினர் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால், அதிகாரிகள் இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, திருவள்ளுவர் சிலையை வைத்தவர்கள் அதனை அகற்றி கொண்டனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இரு தரப்பினரும் எந்த பிரச்னையிலும் ஈடுபடக்கூடாது, என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.