/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்று வாங்கும் மகளிர் திட்ட வணிக வளாகம் கண்டுகொள்ளாத திட்ட அலுவலர்கள்
/
காற்று வாங்கும் மகளிர் திட்ட வணிக வளாகம் கண்டுகொள்ளாத திட்ட அலுவலர்கள்
காற்று வாங்கும் மகளிர் திட்ட வணிக வளாகம் கண்டுகொள்ளாத திட்ட அலுவலர்கள்
காற்று வாங்கும் மகளிர் திட்ட வணிக வளாகம் கண்டுகொள்ளாத திட்ட அலுவலர்கள்
ADDED : ஆக 29, 2024 02:18 AM

உடுமலை, : வாளவாடியில் மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம், பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில், பயன்பாடில்லாமல் வீணாகிறது.
மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுவினர் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு, வணிக வளாகங்கள் கட்டப்பட்டன.
சுய உதவி குழுவினருக்கு குறைந்த தொகை வாடகையாக பெறப்பட்டு, வணிக வளாக கடைகள் விடப்பட வேண்டும்.
உடுமலை வட்டாரத்தில் உடுமலை நகரம், பூலாங்கிணர் மற்றும் வாளவாடியில் மகளிர் திட்ட வணிக வளாகம் உள்ளது.
இதில், உடுமலை நகரில் பாதி கடைகள் செயல்பாட்டில் உள்ளது. பூலாங்கிணர் ஊராட்சியில் உள்ள கடைகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன.
ஆனால் வாளவாடி ஊராட்சியில் உள்ள மகளிர் திட்ட வணிக வளாக கட்டடம், பல ஆண்டுகளாக பூட்டிய நிலையில் பாழடைந்து உள்ளது.
இந்த வளாகம், 2002ம் ஆண்டு பொன்விழா கிராம சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டடம் மிகவும் பழுதடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது.
ஊராட்சியில், சிறு, குறு தொழில் முனைவோர் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கென அமைக்கப்பட்ட இத்திட்டம், இப்போது முடங்கியுள்ளது. கட்டடம் பூட்டியே கிடப்பதால், கால்நடைகள் கட்டுவதற்கும், இரவில் 'குடி'மகன்கள் இளைப்பாறுவதற்கான இடமாக மாறிவிட்டது.
லட்சக்கணக்கான ரூபாயில் கட்டப்பட்ட கட்டடம், எந்த வகையிலும் சுய உதவி குழுவினருக்கு பயனளிக்க வில்லை. கட்டடத்தை அப்புறப்படுத்தவும், புதிதாக வணிக வளாகம் அமைத்து தொழில் திறன்களை மேம்படுத்தவும், மகளிர் திட்டம் நடவடிக்கை எடுக்கும் என, சுய உதவிக் குழுவினர் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
மகளிர் திட்டத்தின் சார்பில், வணிக வளாக கடைகளை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த கட்டடத்தை பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
மகளிர் குழுவினர் கூறியதாவது:
சுயதொழில் செய்வதற்கு, தொழில்கடன்கள் உள்ளிட்ட உதவிகள் அரசு செய்கிறது. ஆனால் எங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், தையல் நிலையம் போன்ற சிறிய கடைகள் அமைப்பதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற கடைகள் அமைப்பதற்கு, தனியார் வணிக வளாகங்களில் அதிக வாடகை செலுத்த முடியாத சூழல் தான், பலருக்கும் தொழில் துவங்குவதற்கு தடையாக இருக்கிறது.
மகளிர் திட்டத்துக்கான வணிக வளாகங்களை, முழுமையாக சுய உதவி குழுவினர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவற்றை புதுப்பித்து வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.