/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! கிடப்பில் போடப்பட்ட திட்டம்
/
நகர நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! கிடப்பில் போடப்பட்ட திட்டம்
நகர நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! கிடப்பில் போடப்பட்ட திட்டம்
நகர நெரிசலை குறைக்க ரவுண்டானா தேவை! கிடப்பில் போடப்பட்ட திட்டம்
ADDED : ஏப் 21, 2024 11:02 PM
உடுமலை:பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரவுண்டானா கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள நகரத்தில், ரோட்டோரத்தில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள, கடைகளுக்கு போதியளவு 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.
இதனால், ஏற்படும் நெரிசல், நகரப்பகுதியில், தொடர்கதையாக உள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை.
உதாரணமாக, நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
நகர எல்லையில் அமைந்துள்ள கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் கட்டப்பட்டது.
இத்திட்டத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் ஒருங்கிணைக்கப்பட்டு, பாரபட்சமில்லாமல், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
அத்திட்ட செயல்பாட்டின் போது, நகரிலுள்ள ரோடு சந்திப்பு பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
குறிப்பாக, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது.
இதில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை சந்திப்பில், ரவுண்டானா, அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நகர நுழைவாயிலாக அமைந்துள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினரை ஒருங்கிணைத்து, 'ரவுண்டானா' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

