ADDED : ஆக 18, 2024 11:45 PM

திருப்பூர்;அவிநாசி செம்மாண்டம்பாளையத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நேற்று, 201 சந்தனமரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தில், நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; கடந்த சில மாதங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.
ஒரத்துப்பாளையம் அணை பகுதியில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் இந்தாண்டு நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாயிகளும் ஆர்வமாக மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றனர்.அவிநாசி அடுத்துள்ள செம்மாண்டம்பாளையத்தில் நேற்று, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான பாலு தோட்டத்தில், 201 சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டன.
பாலசுப்பிரமணியன், ஜோதிமணி, கலைவாணன் ஆகியோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். இத்திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். *
அவிநாசி, செம்மாண்டம்பாளையம் பகுதியில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டன.