/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் நிழல் பந்தல்; பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
கோவில்களில் நிழல் பந்தல்; பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 04, 2024 11:21 PM
திருப்பூர்:கோவில்களுக்கு வரும் பக்தர்களை, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க 'மேட்' மற்றும் நிழல் தரும் பந்தல் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அங்கு வரும் பக்தர்களை, வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
உடுமலை, திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலை மேல் பஞ்சலிங்கம் அருவியும், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ணமீன் பூங்கா என, ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
தினமும் நுாற்றுக்கணக்கில் பக்தர்கள், சுற்றுலா பயணியர் இங்கு வந்து செல்லும் நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரவும், சுற்றுப்பிரகாரம் சுற்றி வருவதற்கும், கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் என்பதை, கோவில் நிர்வாகம் உணர்ந்தது.
விளைவாக, அறநிலையத்துறை சார்பில் 200 மீட்டர் நீளத்திற்கு கோவில் வளாகம் முழுவதும் தரைவிரிப்பு (மேட்) விரிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பிற கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும், வெயிலில் இருந்து பக்தர்களை தற்காக்க, தரைவிரிப்பு, பந்தல் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.