/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை வரும் பின்னே... தற்காப்பு ஆலோசனை முன்னே!
/
கோடை வரும் பின்னே... தற்காப்பு ஆலோசனை முன்னே!
ADDED : பிப் 15, 2025 07:31 AM
கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
என்னென்ன உணவு முறைகளை கடைபிடிக்கலாம் என்பது குறித்து, மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதை பார்க்கலாம்...
வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரணம் மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதனைத் தடுக்க அதிகளவு குடிநீர் பருகுவது மற்றும் சரியான உணவுகள் சாப்பிடுவது அவசியம்.
எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு சீராக இருக்கும்.
பொதுவாக காபி மற்றும் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் வெப்பத்தை அதிகரிக்கும் குணங்கள் கொண்டவை எனவே வெப்ப சூட்டை தவிர்த்துக்கொள்ள டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.
வெயில் காலத்தில் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரிசி, சப்பாத்தி போன்றவற்றை வழக்கம்போல் சாப்பிடுவதுபோல் சாப்பிடலாம். உணவில் மோர், தயிர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நார்சத்து அதிகம் உள்ள பழங்கள் காய்களை சாப்பிடலாம்.
சுட்டெரிக்கும் வெயிலில் உடலைச் சீராக வைத்துக்கொள்ள, ஒவ்வொருவரும் அதற்குத் தகுந்த உணவுமுறையில் கட்டுப்பாட்டை கொண்டு வருவது அவசியம். ஆரோக்கியமான உணவு முறைகளை கடைபிடித்து வெயில் காலத்தில் நம்மை நாமே பாதுகாத்து கொள்வது தான் மிகுந்த புத்திசாலித்தனம்.
குட்டையாக தலைமுடியை பராமரிப்பதன் மூலம், தலையை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். அதிக வியர்வையால், தலையில் நீர் கோர்ப்பதையும், சளி பிடிப்பதையும் தடுக்கலாம்.