மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விடுவிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விடுவிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 14, 2026 07:01 PM
திருப்பூர், ஜூலை 15– மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியால், பிளஸ் 2 மாணவர்கள் படிப்பு மற்றும் பொது தேர்வில் பாதிப்பு ஏற்படும் என ஆசிரியர் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சிவக்கொழுந்து தலைமையில் நடந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், முதுகலை ஆசிரியர்கள் மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது முதல் கட்ட பணி துவங்கவுள்ளது. இதில் முதுகலை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்துவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கும். பிளஸ் 2 ஆசிரியர்களை இப்பணியிலிருந்து விடுவிக்க கோரிக்கை விடுத்தும் பயனில்லை. பிற துறை அரசு ஊழியர்களை பயன்படுத்தாமல், ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்தி மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலை குறித்து ஆசிரியர்கள் வேதனையில் உள்ளனர். 2ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பிப். மாதம் துவங்கவுள்ளது. அப்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடைபெறும். இதுதவிர, பொது தேர்வுக்கு இறுதி நேரத்தில் தயார்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, பொது தேர்வு மாணவர்கள் நலன்கருதி முதுகலை ஆசிரியர்களை இப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
