/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கும்மிருட்டில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
/
கும்மிருட்டில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
ADDED : ஏப் 28, 2024 01:29 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பம் நட்டி ஓராண்டாகியும் தெருவிளக்கு பொருத்தாததால், கும்மிருட்டாக இருக்கும் அவலம் தொடர்கிறது. விபத்துகள் தொடர்கதையாகின்றன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து திருப்பூர் வழியாக அவிநாசிபாளையம், தாராபுரம், ஒட்டன்சத்திரத்துக்கு, 110 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை (என்.எச்., 381) உள்ளது. பைபாஸ் என அழைக்கப்பட்ட போதும், இச்சாலையில், 30 கி.மீ.,க்கு மேல் நகருக்குள் வருவதால், வாகன ஓட்டிகள் சிரமம் தொடர்கதையாக உள்ளது.
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் முன் துவங்கி, பொல்லிக்காளிபாளையம் வரை இரண்டு கி.மீ.,க்கு சாலை நடுவே, 30 க்கும் அதிகமாக மின்கம்பங்கள் நடப்பட்டன; ஓராண்டாகியும் விளக்குகள் பொருத்தாமல் காட்சி பொருளாக உள்ளது. வழித்தடத்தில் மூன்று உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் உள்ளன; மின்விளக்கு பொருத்தியும் எரியாமல் உள்ளது. இதனால், குடியிருப்புக்கு மத்தியில் பயணிக்கும் பைபாஸ் சாலையில், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கும்மிருட்டாக உள்ளது. திடீரென சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளால், அடிக்கடி விபத்து உயிரிழப்பு நடக்கிறது.

