/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான கால்வாயில் அத்துமீறி குளியல்: கண்காணிப்பு அவசியம்
/
பிரதான கால்வாயில் அத்துமீறி குளியல்: கண்காணிப்பு அவசியம்
பிரதான கால்வாயில் அத்துமீறி குளியல்: கண்காணிப்பு அவசியம்
பிரதான கால்வாயில் அத்துமீறி குளியல்: கண்காணிப்பு அவசியம்
ADDED : ஏப் 18, 2024 04:49 AM
உடுமலை : பி.ஏ.பி., பிரதான கால்வாயில், அத்துமீறி குளிக்கும் சுற்றுலாப்பயணியரை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தவிர்க்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., பாசனத்துக்குட்பட்ட விளைநிலங்களுக்கு, பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் பிரதான கால்வாயில் செல்கிறது. இதில், திருமூர்த்தி அணை அருகே, பிரதான கால்வாயில் அத்துமீறி, சுற்றுலாப்பயணியர் குளிக்கின்றனர்.
வினாடிக்கு, 900 கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயில், நீரின் போக்கும் அதிகமாக இருக்கும்.நீச்சல் தெரிந்தவர்களையும் இழுத்துச்செல்லும் அளவுக்கு, நீரின் வேகம் இருக்கும் கால்வாயில், ஆபத்து தெரியாமல் குளிக்கின்றனர்.
குறிப்பாக, பிரதான கால்வாயில் இருந்து, உடுமலை கால்வாய் பிரியும் ஷட்டர் பகுதி திருமூர்த்திமலை ரோட்டின் அருகில் அமைந்துள்ளது. எனவே, சுற்றுலாப்பயணியர் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விட்டு, கால்வாயில் குளிக்கச்செல்கின்றனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாமல், இந்த கால்வாயில், தவறி விழுந்து பலர் இறந்துள்ளனர். எனவே, பொதுப்பணித்துறையினர் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், அப்பகுதியில், நீரின் வேகம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உட்பட தகவல்களை உள்ளடக்கிய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
கோடை விடுமுறை சீசனில், பணியாளர்களை நியமித்து, குளிப்பவர்களை எச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், கெடிமேடு, பூசாரிபட்டி போன்ற இடங்களில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில், பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது.
இப்பகுதிகளில், சரக்கு வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்குள்ள கால்வாய் படிகளின் வழியாக இறங்கி, குளிக்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டுநர்களுக்கு, கால்வாயில் செல்லும் நீரின் வேகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அப்பகுதிகளிலும் எச்சரிக்கை பலகை வைப்பதுடன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

