ADDED : ஆக 09, 2024 02:30 AM

திருப்பூர்:வீரபாண்டியைக் கடந்து செல்லும் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. முறையாக துார் வாராமல் துர்நாற்றம் வீசுவதோடு, கம்பளிப்புழுக்களின் உற்பத்தி தலமாக மாறி வருகிறது.
பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவிலிருந்து வீரபாண்டி வழியாக ஒரு ஓடை கடந்து செல்கிறது. வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் வீதி வழியாகச் சென்று, கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் வழியாக இந்த ஓடை பாய்கிறது. அவ்வழியாகச் சென்று முத்தையன் கோவில் பகுதியில் சங்கிலிப் பள்ளம் ஓடையில் இது சேர்கிறது.
இது இயற்கையாக அமைந்த நீர் வழி ஓடையாக இருந்தாலும்,பெரும்பாலும் கழிவு நீர் கால்வாய் போன்று தான் உள்ளது. இந்த ஓடை கடந்து செல்லும் பகுதிகளிலிருந்து கழிவு நீர் ஆங்காங்கே இதில் சேர்கிறது.
முறையாகத் துார் வாரப்படாமல் ஓடை முழுவதும் பெருமளவு விஷ செடிகள் அதிகளவில் வளர்ந்து புதர் போல் மாறிவிட்டது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுவும், தற்போது கம்பளிப்புழுக்களும் பெருமளவு உற்பத்தியாகிறது.இவை ஓடை அருகேயுள்ள வீடுகளில் புகுந்து பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. கம்பளிப்புழுக்கள் காரணமாக வீடுகளில் வசிப்போர் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் வீடுகளைக் காலி செய்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இந்த ஓடையை முழுமையாகத் துார் வாரி, மழை நீர் முறையாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
வீரபாண்டியை கடந்து செல்லும் ஓடை, முட்புதர் மண்டியுள்ளது.